கொத்தனார் உள்பட 2 பேர் பலி


கொத்தனார் உள்பட 2 பேர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் கொத்தனார் உள்பட 2 பேர் பலியானார்கள்.

திருச்சி

வெவ்வேறு விபத்துகளில் கொத்தனார் உள்பட 2 பேர் பலியானார்கள்.

கொத்தனார்

தா.பேட்டை அருகே துலையாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கன். இவரது மகன் கனகராஜ் (வயது 24). கொத்தனார். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் துலையாநத்தம் - கிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தனியார் சோலார் கம்பெனி அருகே வந்தபோது, தா.பேட்டையை சேர்ந்த சின்ராஜ் (36) என்பவர் ஓட்டி வந்த வேன் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து வேன் டிரைவர் சின்ராஜை கைது செய்தனர்.

மற்றொரு விபத்து

திருச்சி திருவானைக்காவல் மேலகொண்டையம்பேட்டையை சேர்ந்தவர் துரைசாமி (26). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புசுவரில் மோதினார். இதில் கீழே விழுந்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதை கண்ட அந்த பகுதியினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சிறுவன் படுகாயம்

காட்டுப்புத்தூர் அருகே உள்ள பிடாரமங்கலத்தை சேர்ந்த ஜெய்சங்கரின் மகன் கீர்த்திவாசன்(14). இவர் பிடாரமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, ஆண்டாபுரம் காட்டுப்புத்தூர் சாலையில் தவுட்டுப்பாளையம் சேர்ந்த பெரியசாமி மகன் அறிவழகன்(33) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கீர்த்திவாசன் மீது மோதியது. இதில் கீர்த்திவாசனுக்கு கால் முறிந்தது. இதையடுத்து அவர் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெய்சங்கர் காட்டுப்புத்தூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story