வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கிய 2 ரவுடிகள் கைது


வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கிய 2 ரவுடிகள் கைது
x

போரூரில் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கிய 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

போரூர்,

சென்னை போரூர் அடுத்த பாரதியார் தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கி இருந்தவர் தினேஷ் என்ற பீடி தினேஷ் (வயது 23). இவருடைய நண்பர் அஜீம் என்ற முகமது அஜீம் (22). இவர்கள் இருவரும் கடந்த 2 மாதங்களாக இந்த வீட்டில் வாடகைக்கு தங்கி வந்தனர்.

நேற்று நுங்கம்பாக்கம் தனிப்படை போலீசார், இந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வீட்டில் கத்திகள், ஒரு கிலோ கஞ்சா மற்றும் 5 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

ரவுடிகள் கைது

அதில், தினேஷின் நண்பரான குள்ளகுமார் (21) என்பவரை 2 மாதத்துக்கு முன்பு நுங்கம்பாக்கத்தில் வைத்து சாம்பார் என்ற தனசேகர் தரப்பினர் கொலை செய்தனர். இந்த கொலைக்கு தனசேகரை பழி வாங்குவதற்காக நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து, கொலை செய்ய தருணம் பார்த்து காத்திருந்தது தெரிந்தது.

தினேஷ் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், முகமது அஜீம் மீதும் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. ரவுடிகளான இருவரையும் போரூர் போலீசாரிடம் ஆஜர்படுத்தி விட்டு பின்னர் விசாரணைக்காக இருவரையும் நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அந்த வீடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது. 5 நாட்டு வெடிகுண்டுகளையும் பாதுகாப்பான முறையில் போலீசார் எடுத்து சென்றனர். அந்த வீட்டைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story