குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை


குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை
x

சிவகாசியில் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளி கொலை

சிவகாசி பள்ளப்பட்டி ரோட்டில் உள்ள முத்துராமலிங்க காலனியை சேர்ந்தவர் கருப்பையா மகன் சுந்தரபாண்டி (வயது 36). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய், தந்தையுடன் வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் உசேன் காலனியில் உள்ள தான் வேலை செய்யும் நிறுவனத்தின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் சுந்தரபாண்டியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுந்தரபாண்டியை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

புகார்

இந்த சம்பவம் குறித்து சுந்தரபாண்டியின் தாய் தனலட்சுமி (60) என்பவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட சுந்தரபாண்டிக்கும், அதே பகுதியில் வசித்து வரும் திருமணம் ஆன பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது.

இதனை அந்த பெண்ணின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனாலும் சுந்தரபாண்டி அந்த பெண்ணுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் சிலர் சுந்தரபாண்டியை அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது.

2 தனிப்படை

சுந்தரபாண்டியின் தாய் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 5 பேரும் 2 பிரிவாக பிரிந்து சென்றது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் கவுதமன் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.


Next Story