சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 2 டன் இரும்பு கம்பிகள் பறிமுதல்


சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 2 டன் இரும்பு கம்பிகள் பறிமுதல்
x

கனகம்மாசத்திரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 2 டன் இரும்பு கம்பிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர்

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருத்தணிக்கு திருட்டுதனமாக இரும்பு கம்பிகள் கடத்தி வரப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது கனகம்மாசத்திரம் அருகே புதூர் என்ற இடத்தில் அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அந்த வாகனத்தில் இரும்பு கம்பிகள் இருந்தது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் முகையூரை சேர்ந்த ரவிக்குமார் (வயது 24), தாவடிப்பட்டு பகுதியை சேர்ந்த காளிதாஸ் (20) ஆகிய 2 பேரும் திருத்தணியை அடுத்த பூனிமாங்காடு அருகே உள்ள நூல் தயாரிக்கும் மில்லில் இருந்து 2 டன் எடையுள்ள இரும்பு கம்பிகளை திருடி சரக்கு வாகனத்தில் ஏற்றி திருவள்ளூரில் விற்பனைக்கு எடுத்து செல்லும் போது பிடிப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் 2 டன் இரும்பு கம்பிகளையும் பறிமுதல் செய்தனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story