எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 2 ரெயில்கள் மீது மர்மநபர்கள் கல் வீச்சு


எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 2 ரெயில்கள் மீது மர்மநபர்கள் கல் வீச்சு
x

குளித்தலை அருகே எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 2 ரெயில்கள் மீது மர்மநபர்கள் கல் வீசினர். இந்த சம்பவத்தில் ஒரு பயணி காயம் அடைந்தார்.

கரூர்

ரெயில் மீது கல் வீச்சு

காரைக்காலில் இருந்து கேரளா மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ெரயில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் திருச்சிக்கு வந்தது. இதையடுத்து திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கரூர் நோக்கி அந்த ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த ெரயிலின் முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொது பெட்டிகளில் பயணிகள் பலர் இருந்தனர்.

இந்நிலையில் அந்த ரெயில் கரூர் மாவட்டம் குளித்தலை ெரயில் நிலையம் அருகே உள்ள மருதூர் என்ற இடத்தில் இரவு சுமார் 9 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது, ரெயிலின் பொதுப்பெட்டி மீது மர்மநபர்கள் அடுத்தடுத்து கல்களை வீசினர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பயணி காயம்

இதில் ரெயிலில் பயணம் செய்த கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த நிதின் (வயது 30) என்பவரின் நெற்றியில் கல் பட்டதில் அவர் காயம் அடைந்தார்.

இதனையடுத்து சக பயணிகள் அவருக்கு முதலுதவி செய்தனர். இந்த சம்பவம் குறித்து கரூர் ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கச்சக்குடா எக்ஸ்பிரஸ்

இதேபோல் நேற்று மாலை மதுரையில் இருந்து ஆந்திர மாநிலம் கச்சக்குடா செல்லும் விரைவு ெரயில் குளித்தலை-பெட்டவாய்த்தலை இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் கற்களை எடுத்து ரெயிலின் ஏ.சி. பெட்டியில் வீசினர். .

இதில் ரெயிலின் கண்ணாடி உடைந்தது. ஆனால் பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டு குளித்தலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கல்வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story