2 பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி


2 பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றனர்.

பெரம்பலூர்

தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது 2 மகன்களுடன் ஒரு பெண் வந்தார். அவர் திடீரென தனது மகன்களுடன் மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பறித்து, அவர்களை மீட்டனர். மேலும் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், குன்னம் அருகே பென்னகோணம் காலனி தெருவை சேர்ந்த மகேசின் மனைவி இளவரசி(வயது 37) என்பது தெரியவந்தது. இவரது மகன்கள் மகிழன்(14), எழிலன்(12).

குடும்ப பிரச்சினை

மேலும் மகேசுக்கும், இளவரசிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக மகேஷ் தன் குடும்பத்தை சரியாக கவனித்து கொள்ளாமல், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கடந்த 6-ந் தேதி பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி, இளவரசி தனது இடுப்பில் அரை லிட்டர் பாட்டிலில் மண்எண்ணெயை மறைத்து எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவம்

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மற்றொரு பெண், பள்ளி சீருடை அணிந்த தனது மகளுடன் மண்எண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட போலீசார் மண்எண்ணெய் கேனை பறித்து, அவர்களை தடுத்து மீட்டு, விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், குன்னம் அருகே ேக.புதூர் தெற்கு தெருவை சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மனைவி கலா(32), அவரது மகள் தரணி(13) என்பது தெரியவந்தது.

ராஜமாணிக்கம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கலாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது தம்பி தர்மராஜூக்கும்(28) சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அவர் கலாவின் திருமணத்தின்போது போட்ட 20 பவுன் நகை, ரூ.5 லட்சத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று கூறி அவரிடம் தகராறு செய்து வருவதாகவும், இது குறித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நேற்று அவர் தனது மகளுடன் வந்து தீக்குளிக்க முயன்றதும், விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 2 பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story