லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது


நாகூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகையை அடுத்த நாகூர் யானைகட்டி முடுக்கு சந்தில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக நாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்த போது அதில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் நாகூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த உதுமான் மகன் யூசுப் (வயது 28). பெரியார் தெருவை சேர்ந்த முகமது பாரூக் மகன் ஷாகுல் ஹமீது (42) என்பதும், லாட்டரி சீட்டு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. .இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யூசுப், ஷாகுல் ஹமீது ஆகியோரை கைது செய்தனர்.


Next Story