கொட்டகையில் தீ; 20 ஆடுகள் சாவு

கடையம் அருகே கொட்டகையில் தீப்பிடித்து 20 ஆடுகள் கருகி செத்தன
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராஜ் (வயது 50). இவருக்கு சொந்தமான வயல் கடையத்தில் இருந்து ராமநதி அணை செல்லும் வழியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் அருகில் இருக்கிறது. ராஜ் கடந்த 3 ஆண்டுகளாக வயலின் நடுப்பகுதியில் ஆஸ்பெஸ்டால சீட் மற்றும் தார்ப்பாய் மூலம் கொட்டகை அமைத்து ஆடுகளை பராமரித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ஆடுகளுக்கு காவல் இருந்து விட்டு நேற்று காலை 5 மணி அளவில் தனது ஊருக்கு சென்றுள்ளார். அப்போது ஆட்டு கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிவதாக ராஜ்க்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் சுமார் 20 ஆடுகள் தீயில் கருகி செத்தன.
தகவல் அறிந்ததும் கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கொட்டகை தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.






