அரசு வக்கீல் நியமனம் தொடர்பான புதிய விதிமுறைகளை 10 நாட்களுக்குள் உருவாக்க வேண்டும்; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


அரசு வக்கீல் நியமனம் தொடர்பான புதிய விதிமுறைகளை 10 நாட்களுக்குள் உருவாக்க வேண்டும்; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 2 Jan 2017 7:55 PM GMT (Updated: 2 Jan 2017 7:55 PM GMT)

அரசு வக்கீல்கள் நியமனம் தொடர்பாக புதிய விதிமுறைகளை 10 நாட்களுக்குள் உருவாக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அரசு வக்கீல்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்த கட்சியை சேர்ந்த வக்கீல்

சென்னை,

அரசு வக்கீல்கள் நியமனம் தொடர்பாக புதிய விதிமுறைகளை 10 நாட்களுக்குள் உருவாக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு வக்கீல்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்த கட்சியை சேர்ந்த வக்கீல்களை, அரசு வக்கீல்களாக நியமிக்கப்படுகின்றனர் என்றும், அரசு வக்கீல்கள் பதவி என்பது அரசியல் நியமன பதவி கிடையாது என்றும் வக்கீல்கள் வசந்தகுமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பொதுநல வழக்குகளை தனித்தனியாக தாக்கல் செய்தனர்.

மேலும் அந்த மனுவில், அரசு வக்கீல்கள் நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு விரிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளை மாநில அரசுகள் பின்பற்றுவதில்லை என்று கூறியிருந்தனர்.

கடைசி வாய்ப்பு

இந்த மனுக்கள் எல்லாம் ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், அரசு வக்கீல் நியமனம் தொடர்பான புதிய விதிகளை உருவாக்கும் பணி நடந்து வருகிறது என்று கூறினார். எனவே, தமிழக அரசுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்த புதிய விதிகளை உருவாக்கி 10 நாட்களுக்குள், இந்த ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக நியமிக்கப்பட்டள்ள வக்கீலிடம் ஒப்படைக்கவேண்டும். அவர், அந்த புதிய விதிகளை பரிசீலித்து, அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்.

காலஅவகாசம்

அரசு வக்கீல் நியமனம் தொடர்பான புதிய விதிகளை புதுச்சேரி அரசு உருவாக்கி, இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டது. இந்த புதிய விதிகளை பரிசீலிக்க காலஅவகாசம் வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக நியமிக்கப்பட்ட வக்கீல் கூறினார். எனவே, இதை ஏற்றுக்கொண்டு வழக்கு விசாரணையை வருகிற பிப்ரவரி 13–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story