ஆர்.கே.நகர் தேர்தல் பாதுகாப்பு கூடுதல் ராணுவம் இன்று வருகை


ஆர்.கே.நகர் தேர்தல் பாதுகாப்பு கூடுதல் ராணுவம் இன்று வருகை
x

ஆர்.கே.நகர் தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதலாக துணை ராணுவப் படையினர் இன்று வருகை தர உள்ளனர்.


சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் உச்சக்கட்ட பிரசாரம் நடந்து வருகிறது. அங்கு அமைதியான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அனைத்து  ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இந்த நிலையில் இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான கார்த்திகேயன், இடைத்தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கரன்சின்கா உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தண்டையார்பேட்டையில் உள்ள மண்டல அலுவலகத் தில் வைத்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் தேர்தல் ஏற்பாடு குறித்து மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், போலீஸ் கமிஷனர் கரன்சின்கா ஆகியோர் விளக்கி கூறினார்கள்.

இதுதொடர்பாக கார்த்திகேயன் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தலை அமைதியாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 50 வாக்குச் சாவடி பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அதுபோன்ற பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பறக்கும்படையினர் தொகுதி முழுவதும் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.7 லட்சம் பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டனர்.விளக்குகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.   
 
ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து இடம் மாறி சென்றவர்களின் ஓட்டுகளை போடுவதற்கு யாராவது முயற்சி செய்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓட்டு பதிவின் போது 4 வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தேசிய மற்றும் மாநில கட்சிகளின் அடிப்படை யிலும், அகர வரிசைப்படியும் வேட்பாளர்களின் பெயர்கள் அதில் இடம் பெற்றிருக்கும். வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த வித முறைகேடும் செய்ய முடியாது. இணைய தளம் மூலமாக அது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

வாக்காளர்களுக்கு இன்று முதல் வீடு வீடாக பூத் சிலிப் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக 100 சதவீதம் பூத் சிலிப்புகள் தயார் நிலையில் உள்ளன.
ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் மத்திய அரசு ஊழியர் ஒருவர் நியமிக்கப் படுவர்.இவ்வாறு கார்த்திகேயன் கூறினார்.

பின்னர் போலீஸ் கமிஷனர் கரன்சின்கா கூறியதாவது:-

தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதலாக துணை ராணுவப் படையினர் இன்று வருகை தர உள்ளனர். 1,694 பேர் வருகை தர இருக்கிறார் கள். சோதனை சாவடிகள் மூலமாக போலீசார் பலத்த சோதனை நடத்தி வருகிறார் கள். பரிசு பொருட்கள் வினியோகித்தவர்கள் மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய சட்டப்பிரிவுகளிலேயே வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.

தேர்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இதுவரை 145 புகார்கள் வந்துள்ளன. அதில் 141 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. தொகுதியில் கட்சியினர் தொடங்கியுள்ள தேர்தல் அலுவலகங்கள் அருகில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று அல்லது நாளை ஆர்.கே.நகர் தொகுதியில் கொடி அணிவகுப்பும் நடத்தப்பட உள்ளது. குஜராத்தில் இருந்து மேலும் ஒரு தேர்தல் பார்வையாளர் மனோஜ் அகர்வால் நாளை வருகிறார்.இவ்வாறு கரன்சின்கா தெரிவித்தார்.
 

Next Story