தாய்-மகளை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை


தாய்-மகளை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை
x
தினத்தந்தி 13 Jun 2017 12:30 AM GMT (Updated: 12 Jun 2017 7:56 PM GMT)

தாய்-மகளை கொன்று நகை கொள்ளையடித்த வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சேலம்,

சேலம் செவ்வாய்பேட்டை நாகையர் தெருவை சேர்ந்தவர் சேகர். நார் பட்டு வியாபாரி. இவரது மனைவி ராணி(வயது44). இந்த தம்பதிக்கு சங்கீதா(23), மீனா(21), நந்தினி(20) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு சேகர் இறந்து விட்டார். அதன் பின்னர் கணவர் செய்து வந்த நார்பட்டு தொழிலை ராணி கவனித்து வந்தார்.

மூத்த மகள் சங்கீதா பி.எஸ்சி.பட்டதாரி. திருமணம் ஆகவில்லை. 2-வது மகள் மீனாவுக்கு திருமணம் ஆகி விட்டது. இளைய மகள் நந்தினி திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். வீட்டில் ராணி தனது வயதான மாமனார் ராமச்சந்திரன், மகள்கள் சங்கீதா, நந்தினி ஆகியோருடன் வசித்து வந்தார்.

கழுத்தை இறுக்கி கொலை

சேலம் அருகே உள்ள நெய்க்காரப்பட்டியை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் வியாபாரம் தொடர்பாக அடிக்கடி சேகரின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். சேகர் இறந்த பின்னரும், அவரது மனைவி ராணியுடன் நார்பட்டு வியாபாரத் தொடர்பு இருந்து வந்துள்ளது. கடந்த 26.9.2012 அன்று காலை நந்தினி வழக்கம்போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்று விட்டார். வீட்டில் ராணி, மகள் சங்கீதா மற்றும் வயதான மாமனாரும் இருந்தனர்.

அன்று காலை 9 மணிக்கு ஒரு வெள்ளை பையுடன் 5 பேர் கொண்ட கும்பல் ராணியின் வீட்டிற்குள் நுழைந்தது. வீட்டில் ராமச்சந்திரன் ஒரு அறையில் இருந்துள்ளார். வயது முதிர்வின் காரணமாக அவருக்கு சரியாக காது கேட்பதில்லை. சரியாக கண்ணும் தெரியாது. வீட்டிற்குள் நுழைந்த கும்பல் அங்கு தனியாக இருந்த ராணி, அவரது மகள் சங்கீதா ஆகியோரை துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது. பின்னர் அவர்களது கழுத்தில் கிடந்த 40 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தது.

மின்சாரம் பாய்ச்சினர்

மேலும் கொலையை மறைக்க, மின்சாரம் பாய்ச்சி இறந்ததுபோல காண்பிக்க, கிரைண்டருக்கு செல்லும் மின்சார வயரை துண்டித்து ராணி, சங்கீதா உடல்மேல் சுற்றிவிட்டு கும்பல் தப்பியது. இந்த கொலை சம்பவம் வீட்டில் தனி அறையில் இருந்த ராமச்சந்திரனுக்கு தெரியவில்லை. இந்த நிலையில் மதியம் 12.15 மணிக்கு சேகரின் அண்ணன் ராஜாராம், ராணியின் வீட்டுக்கு சென்றார். அங்கு ராணி, சங்கீதா இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் சேலம் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கையில், இருவரும் துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது உறுதியானது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவந்தனர்.

5 பேர் கைது

போலீசாரின் தேடுதல் வேட்டையில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய நெய்காரப்பட்டியை சேர்ந்த தேவேந்திரன்(36), கொண்டலாம்பட்டியை சேர்ந்த ரமேஷ்(31), ராசிபுரம் ஓசகரையான்புதூரை சேர்ந்த ராமராஜ் என்ற டி.வி.கார ராமராஜ்(32), சேலம் எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்த ஜெகதீசன்(26) மற்றும் விஜயகுமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், தேவேந்திரன் அடிக்கடி ராணி வீட்டிற்கு சென்று வந்ததால், அவர்கள் வசதியாக இருப்பதை அறிந்திருந்தார். வீட்டில் தாய்-மகள் தனியாக இருப்பதை அறிந்து கூட்டாளிகளுடன் சேர்ந்து திட்டமிட்டே நுழைந்து இருவரையும் கொலை செய்து நகையை கொள்ளையடித்ததாக தெரிவித்தனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நீதிபதி எம்.ரவீந்திரன் முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை கோர்ட்டில் நடந்து வந்த காலக்கட்டத்தில், ஜாமீனில் வெளியே வந்த விஜயகுமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். மீதம் உள்ள 4 பேர் மீது மட்டும் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 4 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இரட்டை ஆயுள்தண்டனை

ராணி, சங்கீதா ஆகியோரை கொலை செய்த குற்றத்திற்காக தேவேந்திரன், ரமேஷ், ராமராஜ், ஜெகதீசன் ஆகிய 4 பேருக்கும் இ.பி.கோ.302 பிரிவின்கீழ் இரட்டை ஆயுள்தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் கொலை செய்து நகையை கொள்ளையடித்த குற்றத்திற்காக இ.பி.கோ 396 பிரிவின்கீழ் 10 ஆண்டு சிறைத்தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், கூட்டு சதியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இ.பி.கோ.147 பிரிவின்கீழ் 6 மாதம் சிறைத்தண்டனையும், வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து தாக்கிய குற்றத்திற்காக இ.பி.கோ.449 பிரிவின்கீழ் 10 ஆண்டு சிறைத்தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எம்.ரவீந்திரன் உத்தரவிட்டார்.

இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story