பணபேர விவகாரம்: டி.வி.செய்தியாளருடன் எம்.எல்.ஏகள் நடத்திய உரையாடல் முழு விவரம்


பணபேர விவகாரம்: டி.வி.செய்தியாளருடன் எம்.எல்.ஏகள் நடத்திய உரையாடல் முழு விவரம்
x
தினத்தந்தி 13 Jun 2017 6:54 AM GMT (Updated: 13 Jun 2017 6:54 AM GMT)

பணபேர விவகாரம் தொடர்பாக டி.வி. செய்தியாளருடன் எம்.எல்.ஏகள் நடத்திய உரையாடல் முழு விவரம் வெளியாகி உள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பண பேரம் நடந்ததாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பான வீடியோ ஆதாரத்தை ‘டைம்ஸ் நவ்’ ஆங்கில தொலைக் காட்சி நேற்று ஒளிபரப்பியது.

மூன் டி.வி.யின் செய்தியாளர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மதுரை எம்.எல்.ஏ. சரவணனையும், எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த கனகராஜ் எம்.எல்.ஏ.வையும் சந்தித்து  உரையாடி இருக்கிறார். அதன் முழுவிவரம் வருமாறு:-

நிருபர்:- கூவத்தூர் எப்படி இருக்கிறது?

சரவணன் எம்.எல்.ஏ:-அங்கு மது நடமாடுகிறது. கருணாஸ் கூட குடித்தார். எம்.எல்.ஏக்களுக்கு மிரட்டல் வந்ததால் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகள் போல் அங்கு நிலைமை இல்லை.

நிருபர்:- அவர்கள் உங்களுக்கு ஏதாவது செய்தார்களா?

பதில்:- அவர்கள் நேரடியாக எனக்கு எதுவும் செய்ய வில்லை. ஆனால் நாங்கள் (எம்.எல்.ஏக்கள்) பஸ்சில் ஏறியபோது அவர்கள் (சசிகலா அணியினர்) ஒவ்வொரு எம்.எல்.ஏக்கும் ரூ.2 கோடி தரப் போவதாக சொல்லப்பட்டது. கூவத் தூரை அடைந்ததும் ரூ.4 கோடி என்றும், பின்னர் அது ரூ.6 கோடி என்றும் அதிகரித்தது.

அடுத்தநாள் ரொக்கமாக இல்லை., தங்கமாக தரப் போவதாக சொன்னார்கள். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் எங்களுக்கு தங்கத்துடன் பணமும் கொடுத்தார்கள்.

உடனே நான் என் வீட்டுக்கு போன் செய்து எனக்கு தங்கம் தரப்போகிறார்கள், நமது பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும் என்று தெரிவித்தேன். ஆனால், உறுதி அளித்தபடி நடந்து கொள்ளவில்லை.

முகாமில் நிலைமைகள் மாறிவிட்டன. எங்களை எல்லாம் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பவும் கூவத்தூர் முகாம் வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள்.

தமிமுன் அன்சாரியைப் பற்றி ஏன் கேட்க மாட்டேன் என்கிறீர்கள்? அவர் ஓ.பி.எஸ். பக்கம் செல்வதைத் தடுக்க ஏற்கனவே பணம் வாங்கி விட்டார். அவர் மிகப்பெரிய தொகை பெற்றார் ரூ.10 கோடிக்கு மேல் இருக்கும்.

நிருபர்:- இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறீர்கள்?

பதில்:- அவரிடம் பேசி பாருங்கள். அவர் அணி மாற விரும்பினார்.

நிருபர்:- உங்கள் அணிக்கு (ஓ.பி.எஸ். அணிக்கு) பாரதீய ஜனதா ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது, அவர் அதில் சேர மாட்டாரே?

பதில்:- அந்த அணியில் அனைத்து பிரிவினரும் இருக்கிறார்கள். தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் மட்டும் அதிக பட்சமாக ரூ.10 கோடி பெற்றனர். மற்றவர்களுக்கு ரூ.1 கோடி கூட கிடைக்க வில்லை.

அடுத்து கனகராஜ் எம்.எல்.ஏ.வுடனான உரையாடல் வருமாறு:-

நிருபர்:- அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் சென்றதால் மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் தாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டதே?

கனகராஜ் எம்.எல்.ஏ. (எடப்பாடி அணி):- நாங்கள் அரசை காப்பாற்றவே கூவத்தூரில் முகாமிட்டு இருந்தோம். ஒற்றுமையாக இருப்பதை காட்டவே அங்கு கூடி இருந்தோம். ஒருநாள் மட்டும் கூவத்தூரில் தங்க திட்டமிட்டோம். ஆனால் கவர்னர் ஊரில் இல்லாததால் கூடுதலாக தங்க வேண்டி இருந்தது.

நிருபர்:- கூவத்தூரில் உள்ளே நடப்பது என்ன என்று யாருக்கும் தெரியாமல் மர்மமாக இருந்ததே?

பதில்:- உங்களுக்கு (நிருபர்களுக்கு) வேண்டுமானால் அப்படி இருக்கலாம். நாங்கள் சந்தோஷமாகத்தான் இருந்தோம். அங்கு எந்தப்பிரச்சினையும் இல்லை.
‘வாட்ஸ்அப்’ தகவல்

நிருபர்:- சசிகலாவும் மற்ற வர்களும் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.2 கோடியும், தங்கமும் கொடுக்கப்போவதாக வாட்ஸ்அப்பில் தகவல் பரவியதே?

பதில்:- ஆமாம். அவர்கள் எங்களுக்கு பணமும், தங்கமும் தருவதாக உறுதி அளித்தார்கள். ஆனால், சிலருக்கு மட்டுமே கிடைத்தது. மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை.

இவ்வாறு அந்த உரையாடல் இடம் பெற்றுள்ளது.

இந்த  வீடியோ உரையாடலை எம்.எல்.ஏக்கள் சரவணன், கனகராஜ், கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகிய 5 பேரும் மறுத்துள்ளனர்.



Next Story