சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மீதும் கையூட்டு பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மீதும் கையூட்டு பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Jun 2017 7:00 PM GMT (Updated: 13 Jun 2017 6:04 PM GMT)

சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மீதும், கையூட்டு பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு கையூட்டு


தமிழ்நாட்டில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள சசிகலா – எடப்பாடி பழனிசாமி கூட்டணி செய்த முறைகேடுகள் மற்றும் தகிடுதத்தங்கள் குறித்து பா.ம.க. முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதை அக்கட்சியின் உறுப்பினரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சட்டப்படி நடவடிக்கை

ஆட்சி மாற்றம் நடைபெற்ற நேரத்தில் இரு அணிகளின் உறுப்பினர்களுக்கு பணப் பட்டுவாடாவும், தங்கமும் போட்டிபோட்டுக் கொண்டு வழங்கப்பட்டன என்பது குழந்தைகளுக்குக்கூட தெரிந்த உண்மை.

ஒரு உறுப்பினருக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம் என்றால் சசிகலா அணியில் இருந்த 122 உறுப்பினர்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.732 கோடி வினியோகிக்கப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு அமைப்புகளான சி.பி.ஐ. வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவு, உளவுத்துறை ஆகியவற்றுக்கும், தமிழக காவல்துறைக்கும் தெரியாமல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினரிடம் இவற்றை எல்லாம் எவரும் வினியோகித்திருக்க முடியாது.

ஓட்டுக்கு பணம் கொடுத்து ஆட்சியைப் பிடித்து, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கையூட்டு கொடுத்து ஆட்சியைத் தக்கவைத்து ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் பினாமி அரசு இனியும் நீடிக்கக்கூடாது.

மேலும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 171 (இ) பிரிவின்படி கையூட்டு தருவதும், பெறுவதும் குற்றம் என்பதால் சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் மற்றும் கையூட்டு பெற்ற அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story