ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Jun 2017 7:45 PM GMT (Updated: 14 Jun 2017 6:49 PM GMT)

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

5 இடங்களில் தடுப்பணை

சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரமாகவும், திருவள்ளூர் மாவட்டத்தின் பாசன ஆதாரமாகவும் விளங்கும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 5 இடங்களில் தடுப்பணை கட்டும் முயற்சியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகிலுள்ள ஆந்திர மாநில எல்லையான வெளியகரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றிலும், அதன் வரத்துக் கால்வாயிலும் மொத்தம் 5 இடங்களில் தடுப்பணைகளை கட்டும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதைக் கண்டித்து தடுப்பணை கட்டப்படும் வெளியகரம் பகுதியிலும், அதை ஒட்டி அமைந்துள்ள தமிழக எல்லையிலும் திருவள்ளூர் மாவட்ட உழவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தடுத்து நிறுத்த வேண்டும்

ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் திட்டம் உழவர்களுக்கு தெரிவதற்கு முன்பே, உள்ளூர் அதிகாரிகள் மூலம் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தடுப்பணை கட்டப்படுவதை தடுக்க தமிழக அரசு சிறு முயற்சியைக்கூட எடுக்கவில்லை. கொசஸ்தலை ஆற்றில் அணை கட்டும் பணிகளை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்தத் தவறினால் திருவள்ளூர் மாவட்டத்தில் பாசனத்திற்கும், சென்னையில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும்.

திருவள்ளூர் மாவட்ட பாசன ஆதாரங்களையும், சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரத்தையும் பாதுகாக்கும் வகையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்தும்படி ஆந்திர அரசுக்கும், மத்திய அரசுக்கும் தமிழக அரசு அரசியல் மற்றும் சட்டரீதியாக அழுத்தம் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story