பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவிப்பு


பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு அமைச்சர் கே.சி.கருப்பணன் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Jun 2017 10:45 PM GMT (Updated: 14 Jun 2017 8:24 PM GMT)

பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க ரூ.1 கோடியே 44 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

சென்னை,

சட்டசபையில் நேற்று சுற்றுச்சூழல் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இறுதியாக அமைச்சர் கே.சி.கருப்பணன் பதில் அளித்து பேசினார். தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டு பேசினார். அதன் விவரம் வருமாறு:-

பள்ளிகளில் மரக்கன்றுகள் நட முடிவு

* 32 வருவாய் மாவட்டங்களிலும், தேசிய பசுமைப்படை சூழல் மன்ற மாணவர்களுக்கு வினாடி-வினா, பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களை தனித்தனி குழுவாக, ஒரு நாள் சூழல் சுற்றுலாவாக, அருகில் உள்ள சூழல் முக்கியத்துவம் வாய்ந்த வனப்பகுதிகள் மற்றும் வனவிலங்குகள் சரணாலயங்களுக்கு அழைத்து செல்ல உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.64 லட்சம் ஒதுக்கப்படுகிறது.

* 32 வருவாய் மாவட்டங்களில் தலா 30 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளிகளிலும் 50 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும். மரக்கன்றுகள் நடுதல், பராமரித்தல், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்குவதற்காக, பள்ளி ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடியே 44 லட்சம் செலவிடப்படும்.

பொறியாளர்களுக்கு

உயர் திறன் பயிற்சி

* தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், ஊட்டி மற்றும் திருப்பூர் (வடக்கு) ஆகிய 2 மாவட்ட அலுவலகங்களுக்கு ரூ.4 கோடி செலவில் புதிய அலுவலகக் கட்டிடம் கட்டப்படும்.

* நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை தலைமை இடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்ட அலுவலகமும், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஒரு மாவட்ட அலுவலகமும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

* சுற்றுச்சூழல் மேம்பாட்டில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கு நடப்பாண்டு முதல் ரூ.2 லட்சம் செலவில் பசுமை விருதுகள் வழங்கப்படும்.

* திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு, இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையில் ஒரு புதிய மண்டல அலுவலகம் ரூ.1 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

* தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞான அலுவலர்களுக்கு உயர்திறன் பயிற்சி ரூ.25 லட்சம் செலவில் வழங்கப்படும்.


Next Story