அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் ஐகோர்ட்டு உத்தரவு


அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Jun 2017 12:00 AM GMT (Updated: 15 Jun 2017 7:55 PM GMT)

வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும் இதுபோன்ற நிலங்களை சார் பதிவாளர்கள் பத்திரப்பதிவு செய்யவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும் இதுபோன்ற நிலங்களை சார் பதிவாளர்கள் பத்திரப்பதிவு செய்யவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

விவசாய நிலம்

தமிழகத்தில் விவசாய நிலங்களை அழித்து சட்ட விரோதமாக, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாகவும், இதனால் விவசாயமும், விவசாய நிலங்களும் அழிந்து வருவதாகவும் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி அரசாணை வெளியிட்டது. அதில், ‘பத்திரப்பதிவுச் சட்டம் பிரிவு 22 (ஏ)வின்படி, அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம். ஆனால், அதன்பின்னர் உருவாக்கப்படும் வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது’ என்று கூறியிருந்தது.

அரசாணைகள்

இதையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 28-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, பத்திரப்பதிவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை தளர்த்தி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர், இந்த வழக்கு ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, செப்டம்பர் 9-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட தடையை நீட்டித்தும், மார்ச் 28-ந் தேதி உத்தரவை ரத்து செய்தும் மீண்டும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து, அங்கீகாரம் இல்லாத நிலங்களை வரையறை செய்யும் விதிகளை உருவாக்கி தமிழக அரசு கடந்த மே 5-ந் தேதி இரு அரசாணைகளை பிறப்பித்தது. இந்த அரசாணைகளை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட்டு, இந்த விதிகளின்படி அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி கடந்த மே 12-ந் தேதி உத்தரவிட்டது.

பத்திரப்பதிவு செய்யலாம்

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் அய்யாத்துரை ஆஜராகி, ‘கடந்த மே 12-ந் தேதி இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்வது குறித்து சில சந்தேகங்கள் உள்ளன. அதை தெளிவுப்படுத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்பு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை விற்பனை செய்திருந்தால், அந்த வீட்டு மனைகளை மறுவிற்பனை செய்யலாம். அதுபோன்ற நிலங்களை சார் பதிவாளர், பத்திரப்பதிவு செய்யலாம்.

தடை காலம்

அதேநேரம், இந்த ஐகோர்ட்டு அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி தடை விதித்தது. இந்த தடை மார்ச் 28-ந் தேதி தளர்த்தப்பட்டது.

இந்த தடை அமலில் இருந்தபோது, அதாவது செப்டம்பர் 9-ந் தேதி முதல் மார்ச் 28-ந் தேதி வரை இடைப்பட்ட காலத்தில் தடையை மீறி பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை, மறு விற்பனை செய்ய முடியாது.

மேலும், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளில் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கும்போது, தமிழக நகரமைப்பு சட்டத்தின்படியும், கடந்த மே மாதம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை பின்பற்றியும், அந்த நிலங்களை வரையறை செய்யவேண்டும். விசாரணையை ஆகஸ்டு 28-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Next Story