ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது: தலைமை தபால் அலுவலகம் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்தது


ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது: தலைமை தபால் அலுவலகம் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்தது
x
தினத்தந்தி 15 Jun 2017 9:15 PM GMT (Updated: 15 Jun 2017 8:37 PM GMT)

சென்னை ராஜாஜி சாலையில் தலைமை தபால் அலுவலகம் இயங்கி வந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,


சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை தலைமை தபால் அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் 1874-ம் ஆண்டு கட்ட தொடங் கப்பட்டு, 1884-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் தான் சென்னை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

அந்த கட்டிடத்தின் ஒரு பகுதியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் இயங்கி வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பருவமழையில் இந்த கட்டிடம் சேதம் அடைந்தது. அதன்பின்னர், அந்த கட்டிடத்தை யாரும் பயன்படுத்தாததால் பாழடைந்து போனது.

இருப்பினும், கட்டிடத்தின் பிரதான நுழைவுவாயில் பகுதி மற்றும் நடுப்பகுதியில் தான் தற்போது சென்னை பொது தபால் அலுவலகம் இயங்கி வருகிறது.

மேற்கூரை இடிந்தது

இந்த நிலையில், ஏற்கனவே கட்டிடத்தில் பாழடைந்து கிடந்த அந்த ஒரு பகுதியின் மேற்கூரை நேற்று முன்தினம் மாலை பலத்த காற்று வீசியதால் திடீரென்று இடிந்து விழுந்தது.

நல்ல வேளையாக அந்த நேரத்தில் யாரும் அந்த பகுதி வழியாக செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இடிந்து விழுந்த மேற்கூரையின் சில பகுதி கட்டிடத்தின் உச்சியில் அபாயமான முறையில் தொங்கிக்கொண்டு இருக்கிறது.

கோரிக்கை

அதை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், பாழடைந்த கட்டிடத்தை சீரமைக்கவும் அந்த பகுதி மக்களும், பொது தபால் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களும், கட்டிடத்தின் பின்புறம் இயங்கி வரும் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணிபுரியும் ஊழியர் களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story