ஜி.எஸ்.டி. வரி குறித்து எழும் சந்தேகங்களுக்கு மாநில தலைவர்கள் கருத்தரங்குகள் மூலம் விளக்கம் அளிப்பார்கள் மத்திய மந்திரி பேட்டி


ஜி.எஸ்.டி. வரி குறித்து எழும் சந்தேகங்களுக்கு மாநில தலைவர்கள் கருத்தரங்குகள் மூலம் விளக்கம் அளிப்பார்கள் மத்திய மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 16 Jun 2017 5:37 PM GMT (Updated: 16 Jun 2017 5:37 PM GMT)

ஜி.எஸ்.டி. வரி குறித்து எழும் சந்தேகங்களுக்கு மாநில தலைவர்கள் கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் மூலம் விளக்கம் அளிப்பார்கள் என மத்திய ராஜாங்க மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் மத்திய நிதித்துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

 அப்போது அவர் கூறியதாவது:–

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு 3 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நிறைவு செய்துள்ளது. இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. முதன் முதலாக ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்தது பா.ஜ.க. அரசு தான்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பொருளாதாரத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மிகப்பெரிய சீர்திருத்தம் என்பது ஜூலை 1–ந் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஆகும்.

ஜி.எஸ்.டி. வரி குறித்து தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் வணிகத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு விளக்கங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் ஜி.எஸ்.டி. வரி குறித்த சந்தேகங்கள் முழுமையாக தீர்க்கப்பட்டு இருக்கும் என நம்புகிறேன்.

சந்தேகங்களுக்கு விளக்கம்

இதற்கு மேலும் ஜி.எஸ்.டி. வரி குறித்து எழும் சந்தேகங்கள் குறித்து மாநில தலைவர்கள் கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் மூலம் விளக்கம் அளிப்பார்கள். மத்திய மந்திரிகளும் மாநிலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஜி.எஸ்.டி. வரி குறித்த சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள்.

மேலும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் வருகிற 18–ந் தேதி நடைபெற உள்ளது. அதிலும் ஜி.எஸ்.டி. வரிக்கான விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக மூன்று மூத்த மந்திரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தேர்வு செய்யும் வேட்பாளரை கட்சியின் தலைவர் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story