குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிவு


குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிவு
x
தினத்தந்தி 13 Aug 2017 4:54 AM GMT (Updated: 13 Aug 2017 4:53 AM GMT)

நாகை குத்தாலம் அருகே மாதிரிமங்கலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிவு ஏற்பட்டு உள்ளது.


நாகை, 

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி ஓ.என்.ஜி.சி. எண்ணை குழாயில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிவு ஏற்பட்டது. இதனையடுத்து ஏற்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மாதிரிமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் ஓ.என்.ஜி.சி. குழாயில் இன்று காலை 5 மணியளவில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிவு ஏற்பட்டது. 

இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று உள்ளனர். மாதிரி மங்கலம் வழியாக செல்லும் ஓ.என்.ஜி.சி.குழாயை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மாதிரிமங்கலம் வழியாக செல்லும் குழாயில் 4-வது முறையாக உடைப்பு ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

4-வது முறையாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு எரிவாயு கசிந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்து உள்ளனர். பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டு எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சாட்டிஉள்ளனர். கசிவை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. 

Next Story