அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேருக்கு நோட்டீஸ் தமிழக அரசு உத்தரவு


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேருக்கு நோட்டீஸ் தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 10 Sep 2017 11:30 PM GMT (Updated: 10 Sep 2017 6:31 PM GMT)

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

7-வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் ஜாக்டோ - ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பங்கேற்ற 60 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தை அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இதனால், நிர்வாகிகள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜாக்டோ - ஜியோ அமைப்பு இரண்டாக உடைந்தது.

தற்போது, 17 சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தடை விதித்துள்ளது. இருந்தாலும், தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஐகோர்ட்டு தீர்ப்பை மதித்து அரசு ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும், ஜாக்டோ - ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் ஒரு லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஈடுபட இருக்கின்றனர்.

Next Story