மன்னார்குடியில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு தீ வைப்பு; போலீஸ் குவிப்பு


மன்னார்குடியில் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு தீ வைப்பு; போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 12 Sep 2017 5:19 AM GMT (Updated: 12 Sep 2017 5:19 AM GMT)

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தால் மன்னார்குடியில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மன்னார்குடி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோபால சமுத்திரம் வீதியில் அ.தி.மு.க மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன் கீற்று கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. கோடை காலங்களில் இந்த கீற்று கொட்டகையில் மோர், தண்ணீர் பந்தல் அமைக்கப்படும்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் அ.தி.மு.க. அலுவலகத்தின் கீற்று கொட்டகைக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் கொட்டகை முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. அ.தி.மு.க. அலுவலகத்திற்கு  தீ வைக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் வந்து பார்வையிட்டனர். இது குறித்து மன்னார்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.

அ.தி.மு.க. அலுவலகத்தை போலீசார் ஆய்வு செய்த போது அதன் அருகே உள்ள இந்தியன் வங்கியில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி.கேமிரா துணியால் மறைத்து  வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. எனவே திட்டமிட்டே இந்த தீ வைப்பு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுவதால் கட்சி நிர்வாகிகள் பெரும்பாலானோர் சென்னை சென்று விட்டனர். இதனால் அலுவலக நிர்வாகி சத்திய மூர்த்தி போலீசில் புகார் செய்தார். அதில் முக்கிய பிரமுகர்கள் 2 பேர் தூண்டுதலின் பேரில் கட்சி அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து இருக்கிறார்.

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தால் மன்னார்குடியில் பதட்டம் நிலவுகிறது.போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story