சாரண, சாரணியர் இயக்க தேர்தல் முறையாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது - தேர்தல் அதிகாரி


சாரண, சாரணியர் இயக்க  தேர்தல் முறையாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது - தேர்தல் அதிகாரி
x
தினத்தந்தி 16 Sep 2017 11:31 AM GMT (Updated: 16 Sep 2017 11:31 AM GMT)

சாரண, சாரணியர் இயக்க தேர்தல் முறையாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது என தேர்தல் அதிகாரி கலாவதி கூறினார்.

சென்னை

சாரண-சாரணியர் இயக்க தேர்தல் சென்னையில் இன்று நடந்தது. மெரினா கடற்கரை சாலையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கலாவதி முன்னிலையில் வாக்குப்பதிவு நடந்தது.

தலைவர், 3 துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய பொறுப்புகளுக்கு இந்த தேர்தல் நடந்தது. மொத்தம் 499 வாக்குகள் உள்ளன. சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் ஓட்டுப்போட தகுதியானவர்கள்.

கடும் சர்ச்சைக்கு மத்தியில் தலைவர் பதவிக்கு பா.ஜனதா தேசிய செயலர் எச்.ராஜா போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி போட்டியிட்டார். இருவரும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றபோது அங்கு வந்திருந்தனர்.

இன்று பிற்பகல் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், முடிவுகளை தேர்தல் அதிகாரி கலாவதி அறிவித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

வாக்களிக்க தகுதி உள்ள 499 பேரில் 286 பேர் வாக்களித்தனர். 2 வாக்குகள் செல்லாதவை  இதில், தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா 52  வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் ஒருமனதாக  தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தேசிய தலைமை அலுவலகத்திற்கு முறையான தகவலை அளித்தே நாங்கள் தேர்தலை நடத்தினோம். முறைகேடு நடந்திருப்பின் ஹெச்.ராஜா தேர்தலை பார்வையிட வந்து இருக்கத் தேவையில்லைதேர்தல் முறையாக நடத்தப்பட்டு உள்ளது என கூறினார்.

சாரண சாரணியர் அமைப்பின் துணை தலைவர் தேர்தல் : மணி, ரங்கநாதன் மற்றும் பெரியண்ணன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

 


Next Story