பெரியபாண்டியன் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம்: காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல் துறை வழக்கு பதிவு


பெரியபாண்டியன் சுட்டு கொல்லப்பட்ட விவகாரம்:  காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல் துறை வழக்கு பதிவு
x
தினத்தந்தி 17 Dec 2017 4:56 AM GMT (Updated: 17 Dec 2017 4:56 AM GMT)

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

சென்னை,

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம் உள்ளிட்ட 2 பேரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடந்த 8ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் சென்றனர்.

கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், போலீஸ் ஏட்டுகள் எம்புரோஸ், குருமூர்த்தி, முதல்நிலை காவலர் சுதர்சன் ஆகியோரும் உடன் சென்று இருந்தனர்.  ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ஜெயத்ரன் தாலுக்கா ராமாவாஸ் கிராமம் தான் பயங்கர கொள்ளையன் நாதுராமின் சொந்த ஊர் ஆகும்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள செயல்படாத தொழிற்சாலை கட்டிடம் ஒன்றில் பதுங்கி இருந்த நாதுராமை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் ஆகியோர் தங்களுடன் வந்திருந்த 3 போலீசாருடன் சுற்றி வளைத்தனர்.  இந்நிலையில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கியால் தான் சுட்டுள்ளனர் என்றும், சுட்டது கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் தான் என்றும் சென்னை நகர உயர் போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் அந்த கொள்ளையன் யார்? என்பதை வெளியிடவில்லை.

இந்த நிலையில், பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என ராஜஸ்தான் காவல் துறை நேற்று தெரிவித்தது.

பெரிய பாண்டியனை காப்பாற்ற முயன்றபொழுது தவறுதலாக முனிசேகர் சுட்டுள்ளார் என பாலி மாவட்ட எஸ்.பி. கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அஜாக்கிரதையாக இருந்ததன் மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தியதன் கீழ் முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Next Story