ஓகி புயல் பாதிப்பு : தமிழகத்திற்கு ரூ 4047 கோடி நிவாரணம் வழங்க பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை


ஓகி புயல் பாதிப்பு : தமிழகத்திற்கு  ரூ 4047 கோடி  நிவாரணம் வழங்க பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை
x
தினத்தந்தி 19 Dec 2017 9:55 AM GMT (Updated: 19 Dec 2017 9:55 AM GMT)

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ 4047 கோடி நிவாரணம் வழங்க பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்து உள்ளார்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் கடந்த 30 ந்தேதி வீசிய ஒகி புயல் பேரிழப்பை ஏற்படுத்தியது. புயலால் ஏற்பட்ட சேதங்கள், பாதிப்புகளை பார்வையிட பிரதமர் நரேந்திரமோடி இன்று பிற்பகல் கன்னியாகுமரி வந்தார்.

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு மதியம் 2.45 மணிக்கு வந்து சேர்ந்தார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அரசின் தலைமை செயலாளர், முதன்மை செயலாளர்கள் வரவேற்றனர்

பிரதமர் மோடி வருவதையொட்டி குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களான தூத்தூர், இரயுமன்துறை, பூத்துறை, சின்னத்துறை, இரவிபுத்தன் துறை, நீரோடி உள்பட 8 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் அங்குள்ள ஆலய பங்கு தந்தையர்கள், கன்னியாகுமரிக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். அவர்களை கருத்தரங்கு கூடத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். மேலும் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதுபோல பயிர் நிலங்கள் சேதமடைந்ததால் பாதிப்புக்கு ஆளான விவசாயிகளையும் சந்தித்து பேசுகிறார். மேலும் விவசாய சங்க பிரதிநிதிகளையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிகிறார்.

கன்னியாகுமரி மாவட்ட விருந்தினர் மாளிகையில், ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. மீனவர்கள், விவசாயிகள் பாதிப்பு குறித்து கேட்டறிந்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஒகி புயல் சேத அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை வைத்து உள்ளார். ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணமாக ரூ 4047 கோடி  வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்.

Next Story