ஜனவரி முதல் வாரத்தில் பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டம் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்


ஜனவரி முதல் வாரத்தில் பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டம் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2017 10:45 PM GMT (Updated: 20 Dec 2017 7:17 PM GMT)

‘கார்ட்டோ சாட்’ உள்பட 31 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

சென்னை,

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-எச் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் செயற்கைகோளின் மேல் அமைக்கப்பட்டு இருந்த வெப்பத்தகடு சரியாக செயல்படாததால் செயற்கைகோள் தோல்வியை தழுவியது.

இதனையடுத்து தற்போது ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் செயற்கைகோளை செலுத்தும் பணியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தோல்விக்கு பின்னர் செலுத்தப்படும் இந்த செயற்கைகோள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் என்பதால், இந்த ராக்கெட்டை ஏவும் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-39 ராக்கெட் தோல்வி அடைந்தது. இதனால் இனி வரும் காலங்களில் ஏவப்படும் ராக்கெட்டுகளை மிகவும் எச்சரிக்கையுடன் இஸ்ரோ கையாண்டு வருகிறது. தொலைதூர உணர்திறன் செயற்கைகோள் ‘கார்ட்டோ சாட்’ உள்பட 31 செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் வரும் ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் செலுத்துவது தான் அடுத்த இலக்காக உள்ளது. இதற்கான பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்.

தொடர்ந்து அடுத்த ஆண்டு (2018) முதல் காலாண்டில் சந்திரயான்-2 உள்பட 3 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்துவதற்கான பணிகளும் 2-வது ஏவுதளத்தில் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து செயற்கைகோள்களை விண்ணுக்கு எடுத்து செல்ல தொடர்ந்து பயன்படுத்தும் வகையிலான ’மறுபயன்பாட்டு வெளியீட்டு வாகனம்’ 2-வது தொழில்நுட்பத்தில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இம்மாத இறுதியில் பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்ட போதிலும், தொடர்ச்சியான சோதனைகள் நடத்த வேண்டி இருப்பதால் வரும் ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. எந்த முரண்பாடுகளையும் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Next Story