சென்னையில் நோக்கியா செல்போன் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை


சென்னையில் நோக்கியா செல்போன் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 24 Dec 2017 10:30 PM GMT (Updated: 24 Dec 2017 7:53 PM GMT)

சென்னையில் நோக்கியா செல்போன் தொழிற்சாலையை மீண்டும் திறக்க நடவடிக்கை

சென்னை,

சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் தொழிற்சாலையை மீண்டும் திறக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

சென்னை வந்த மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த தொழிற்சாலைக்கு புத்துயிரூட்ட மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விரைவில் வியக்கத்தக்க வகையில் நல்ல தீர்வு கிடைக்கும்.

இந்தியாவை மின்னணுவில் மேம்பட்ட நாடாக மாற்ற முயற்சித்து வருகிறோம். டிஜிட்டல் மயமான துறைகளுக்கும், டிஜிட்டல் மயமாகாத துறைகளுக்கும் உள்ள இடைவெளி குறைக்கப்படும். இதற்காகவே சிறு நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (பி.பி.ஓ.) தொடங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சிறு நகரங்களில் 23 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்க திட்டமிடப்பட்டது. இதில் 16 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. மதுரை, திருப்பத்தூர், கோட்டகுப்பம், கோயம்புத்தூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய நகரங்களில் இந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவைகளில் 200 பெண்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கிராம பஞ்சாயத்துகளில் 12 ஆயிரம் பொது சேவை மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டு, இதில் 9 ஆயிரம் மையங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

ஒரு பொருளாதார இதழ் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது, இது விரைவில் சீனாவை முந்திவிடும் என்று தெரிவித்துள்ளது. தொழில் தொடங்குவோரையும், சொந்த வியாபாரம் செய்பவர்களையும் ஊக்கப்படுத்த முத்ரா திட்டத்தின் கீழ் 8 லட்சம் இந்தியர்களுக்கு ரூ.4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் 40 லட்சம் பேர் நேரடியாகவும், ஒரு கோடி பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ள னர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள்.

புதிய தொழில்நுட்பம் ஆரம்பத்தில் 5 வேலைகளை இழக்கச் செய்யும். அதேசமயம் அந்த தொழில்நுட்பம் முன்னேற்றம் அடையும்போது 500 வேலைவாய்ப்புகளை உருவாக்கும். கம்ப்யூட்டர்கள் அறிமுகமான போதும் ஆரம்பத்தில் இது தான் நடந்தது. ஆனால் இப்போது இது தான் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் ஒன்றாக உள்ளது. எனவே தொழில்நுட்பம் பயனுள்ளது.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Next Story