நிர்மலாதேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவி பேராசிரியை யார்? விரைவில் விசாரணை


நிர்மலாதேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவி பேராசிரியை யார்? விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 24 April 2018 7:20 AM GMT (Updated: 24 April 2018 7:20 AM GMT)

நிர்மலாதேவியுடன் தங்கிய தூத்துக்குடி தனியார் கல்லூரி உதவி பேராசிரியை யார் என விசாரணை நடத்தி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. #NirmalaDevi

விருதுநகர்:

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர்.

25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆனால் பேராசிரியை நிர்மலாதேவி இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறினாலும் அவர்கள் பெயரை தெரிவிக்கவில்லை.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, மேலாண்மை துறை உதவி பேராசிரியர் முருகன் ஆகியோர் தூண்டுதலின்பேரிலேயே மாணவிகளிடம் பேசியதாக மட்டும் தெரிவித்தார். மற்ற கேள்விகளுக்கு ஆம், இல்லை, ஞாபகம் இல்லை என ஒற்றை வரியிலேயே பதில் அளித்துள்ளார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு அவர் முழுமையாக ஒத்துழைக்காததால் விசாரணையில் தொய்வு நிலை நீடிக்கிறது. இன்றும் அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

நாளை (25-ந்தேதி) பேராசிரியை நிர்மலாதேவியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டி உள்ளது. அப்போது மேலும் 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நிர்மலாதேவி எங்கு தங்கினார் என குழப்பம் நீடித்த நிலையில் அது குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, 38 அறைகள் கொண்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் விருந்தினர் இல்லத்தின் அறை எண் 215-ல் நிர்மலா தேவி 9 நாட்கள் தங்கியுள்ளார்.  தூத்துக்குடியைச் சேர்ந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியையுடன் நிர்மலாதேவி ஒரே அறையில் தங்கியுள்ளார். தூத்துக்குடி பேராசிரியையின் பெயரில் அறை பதிவிடப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து அவர் யார் என விசாரணை நடத்தி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. விரைவில் அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது .

Next Story