நிர்மலா தேவி விவகாரம் பேராசிரியர் முருகனை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி


நிர்மலா தேவி விவகாரம் பேராசிரியர் முருகனை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
x
தினத்தந்தி 25 April 2018 7:54 AM GMT (Updated: 25 April 2018 7:54 AM GMT)

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் பேராசிரியர் முருகனை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. #NirmalaDevi #NirmalaLeaks

விருதுநகர், 

கல்லூரி மாணவர்களை தவறான பாதைக்கு அழைக்கும் விதமாக செல்போனில் பேசியதாக அருப்புக் கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேலாண்மைத்துறை உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர்.

இதில் உதவி பேராசிரியர்  முருகன், பல்கலைக்கழக வருகை பதிவேட்டில் கையெழுத்திட வந்தபோது சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார். அவருக்கு சம்மன் வழங்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். கடந்த 2 நாட்களாக விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீது குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இருப்பது தெரியவந்ததால் நேற்று இரவு பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டார். அவரை ஒரு நாள் காவலில் வைக்க சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கீதா உத்தரவிட்டார்.  

இதனைத் தொடர்ந்து பேராசிரியர் முருகன், விருதுநகரில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இன்று கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்திய  சி.பி.சி.ஐ.டி. போலீசார் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு செய்தனர்.  பேராசிரியர் முருகனை 5 நாள்   சி.பி.சி.ஐ.டி. காவலில் வைத்து விசாரனை நடத்த மாஜிஸ்திரேட்டு கீதா  உத்தரவிட்டு உள்ளார்.

முன்னதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகளிடம்  வாக்கு மூலம் அளித்த பேராசிரியர் முருகன்  எனக்கு மட்டுமல்ல, வேறு சில பல்கலைக்கழக அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என தெரிவித்தார்.  மேலும் பேராசிரியர் முருகன், பல்கலைக் கழகத்திற்குட்பட்ட வேறு சில கல்லூரிகளிலும் தவறான செயல்பாடு வைத்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story