காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை


காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நல்ல தீர்வு கிடைக்கும் ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை
x
தினத்தந்தி 15 May 2018 11:45 PM GMT (Updated: 15 May 2018 9:26 PM GMT)

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

சென்னை,

காவிரிநீரை பெறுவதற்கு மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து ஜெயலலிதா காலம் வரையில், அந்த இருபெரும் தலைவர்கள் எடுத்த நடவடிக்கையால் தான் இப்பிரச்சினை உயிரோட்டமாக இருக்கிறது.

இன்றைக்கு மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறது. அதில் இருக்கிற சாதக, பாதகங்களை கலந்துபேசி தருகின்ற நேரத்தில், ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்துக்கு உறுதியாக நல்ல தீர்வு வரும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். தமிழக சட்டமன்ற மானியக்கோரிக்கை கூட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் உரிய நிதி அளிக்கப்படும். இதில் பல்வேறு இனங்களில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்புவார்கள். தமிழக அரசின் சார்பில் உரிய பதிலை நாங்கள் அளிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது காவிரி விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் உங்களை சந்திப்பதற்கு நேரம் கேட்டிருப்பதாக சொல்லி இருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவர் என்னை சந்தித்தால், அந்த சந்திப்புக்கு பின்னர் என்னுடைய முடிவை நான் தெரிவிப்பேன்’ என்று ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.


Next Story