சென்னை மெரினாவில் ஈழத்தமிழர்கள் நினைவேந்தல் பேரணி


சென்னை மெரினாவில் ஈழத்தமிழர்கள் நினைவேந்தல் பேரணி
x
தினத்தந்தி 20 May 2018 12:56 PM GMT (Updated: 20 May 2018 12:56 PM GMT)

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையில் சென்னை மெரினா பகுதியில் ஈழத்தமிழர்கள் நினைவேந்தல் பேரணியில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டுவருகின்றனர். #MarinaBeach

சென்னை,

இலங்கையில் போரின் போது உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதாக தகவல் ஒன்று வெளிவந்தது. 13 இயக்கங்கள் ஆதரவு தெரிவித்து நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்திருந்த நிலையில் மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு ஐகோர்ட்டு தடை விதித்திருந்த நிலையில் உத்தரவை மீறி 
மெரினாவில் நிகழ்வுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் 
மெரினாவில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. 

மெரினா பொழுது போக்கு இடம் என்பதால் நினைவேந்தல் நடத்த அனுமதியில்லை என போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில் மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 1000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் பாரதி சாலை முதல் கண்ணகி சாலை வரை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் 
பேரணியாக செல்ல இருக்கின்றனர். பேரணியினர் தொடர்ந்து மெரினா பகுதியில் நுழையாமல் இருக்க போலீஸ் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் சாதாரண உடையிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேரணியில் வைகோ, திருமுருகன் காந்தி மற்றும் தெலகான் பாகவி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவேந்தல் பேரணியில் பங்கேற்ற வைகோ “மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நினைவேந்தல் நிகழ்ச்சியின் நோக்கம்; இலங்கை ராணுவத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்” என கூறினார்.

Next Story