எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து - ரஜினிகாந்த்


எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து - ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 20 May 2018 1:47 PM GMT (Updated: 20 May 2018 1:47 PM GMT)

எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து என்று ரஜினிகாந்த் கூறினார். #Rajinikanth

சென்னை,


நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மகளிர் அணி செயலாளர்களை சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில் கர்நாடக மாநில அரசியல் குறித்து பேசினார். 

கர்நாடக தேர்தல் குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளித்து பேசுகையில், நமது அரசியல் அமைப்பு சட்டப்படி சட்டமன்றத்தில் தங்கள் பலத்தை நிரூபிக்கவேண்டும். அதை நிரூபிக்க போகிறார்கள். இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன் என்றார். எடியூரப்பா பதவி விலகியதை எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து. அப்படி அவர்கள் செய்து இருக்கக்கூடாது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியது. அதற்கு எனது வணக்கங்கள் என்றார். 

காவிரி விவகாரம் தொடர்பாக பேசுகையில், சுப்ரீம் கோர்ட்டு என்ன தீர்ப்பு கொடுத்தார்களோ அதை நிறைவேற்றியே ஆகவேண்டும். அது அவர்களது (காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம்) கடமை. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அடிப்படையில் ஆணையம் அமைக்கப்பட்டு இருக்கிறது. காவிரி நீர் பங்கீட்டில் அணைகளின் முழுக் கட்டுப்பாடும் ஆணையத்திடமே இருக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. கர்நாடக அரசின் பொறுப்பில் ஆணையம் செயல்பட்டால் அது நல்லதல்ல. ஆணையத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிகம் இருப்பார்கள். அரசியல் தலையீடும் நிச்சயம் இருக்கும். எனவே இந்த வி‌ஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை போகத் போகத்தான் பார்க்க முடியும் என்றார். 

Next Story