நிபா வைரஸ் காய்ச்சல் பீதி: தமிழக - கேரள எல்லையில் ரத்த பரிசோதனை


நிபா வைரஸ் காய்ச்சல் பீதி: தமிழக - கேரள எல்லையில் ரத்த பரிசோதனை
x
தினத்தந்தி 22 May 2018 4:51 AM GMT (Updated: 22 May 2018 5:15 AM GMT)

கேரளத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பீதி காரணமாக தமிழக - கேரள எல்லையில் ரத்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது. #NipahVirus

கன்னியாகுமரி,

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தாக்குதலால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவக்கூடும் அபாயம் உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், கன்னியாகுமரியில் இருந்து கேரளா சென்று வருபவர்களிடம் ரத்த பரிசோதனை செய்யப்படும் என்று மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மதுசூதனன் தெரிவித்துள்ளார். மேலும் நிபா வைரஸ் தாக்குதல் உள்ளதா என கண்டறிய பரிசோதனையும் செய்யப்படும் என்றும் இதற்காக, தமிழக - கேரள எல்லையான களியக்காவிளையில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் பழந்தின்னி வௌவால்களால் பரவுகிறது. வௌவால்கள் கடித்த பழங்களை சாப்பிடுவதால் இந்த காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளது. நிபா வைரஸ் தாக்கியவருக்கு முதல் அறிகுறியாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். பின், கடுமையான தலைவலி, காய்ச்சல் உண்டாகும். பின்னர் இது மூளைக் காய்ச்சலாக மாறிவிடுகிறது. நிபா வைரஸால் பாதிக்கப்படுபவர்களில் 75% பேர் உயிரிழப்பதாகவும் இதற்கு மருத்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி ஏதும் இல்லை. கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும், நிபா வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய நோய் தடுப்பு மைய இயக்குநர் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமிழக எல்லைகளான கோயமுத்தூர், நீலகிரி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Next Story