ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி


ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 22 May 2018 10:35 AM GMT (Updated: 22 May 2018 10:37 AM GMT)

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்து உள்ளார். #EdappadiPalanisamy | #SterliteProtest

சென்னை

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆலைக்கு மிக அருகில் உள்ள அ.குமரெட்டியபுரம் மக்கள் நடத்திவரும் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ள நிலையில், இன்று போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. போராட்டக்காரர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதால் பொதுமக்கள் கல்வீசி அவர்களை தாக்கினர். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்து சூறையாடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்த வாகனங்களுக்கு தீவைத்தனர்.  இதனால் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயராமன்(55), தாமோதர் நகர் பகுதியில் வசிக்கும் மணிராஜ், குறுக்குசாலையை சேர்ந்த தமிழரசன்(28), ஆசிரியர் காலணியை சேர்ந்த சண்முகம்(40), மேட்டுப்பட்டியை சேர்ந்த கிளாஸ்டன்(40), தூத்துக்குடியை சேர்ந்த கந்தையா(55)  உள்பட 7 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் 65 பேர்  தடியடியில் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும்  .பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு நடவடிக்கை எடுக்கும். சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட்டைபுதுப்பிக்க இசைவாணையில் அரசு கையெழுத்திடவில்லை. 20 ஆயிரம் பேர் ஊர்வலமாக சென்றபோது வன்முறை வெடித்தது.தூத்துக்குடியில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது.சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு கூடுதலாக காவல்துறையினர் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலை இயங்காமல் இருப்பதற்கு ஏப்ரல் மாதமே உத்தரவிடப்பட்டுள்ளது என கூறி உள்ளார்.

Next Story