ஸ்டெர்லைட் மீண்டும் செயல்பட வாய்ப்பில்லை; தண்ணீர், மின்சாரம் நிறுத்தம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி


ஸ்டெர்லைட் மீண்டும் செயல்பட வாய்ப்பில்லை; தண்ணீர், மின்சாரம் நிறுத்தம் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
x
தினத்தந்தி 24 May 2018 2:30 PM GMT (Updated: 24 May 2018 2:30 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் மற்றும் மின்சார சேவையானது நிறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறிஉள்ளார். #SterliteProtest #SterliteKillings #Sterlite


தூத்துக்குடி,

  தூத்துக்குடியில் அமைதியை நிலைநாட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் சிறப்பு அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, எஸ்பி முரளி ரம்பா ஆகியோர் ஆலோசனையை மேற்கொண்டார்கள். தனியார் பேருந்து உரிமையாளர்கள், வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்களிடமும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேச்சுவார்த்தை மேற்கொண்டார். தூத்துக்குடியில் மீண்டும் இயல்பு நிலைமையை கொண்டு வருவதே முக்கிய நோக்கம் என்று கூறினார்.

 ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். போராட்டத்தில் 19 பேர் படுகாயம், 83 பேர் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  தூத்துக்குடியில் மீண்டும் இயல்பு நிலைமையை கொண்டு வருவதே முக்கிய நோக்கமாகும். தூத்துக்குடி சம்பவத்தில் இருசக்கர வாகனம் உட்பட மொத்தம் 98 வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்து உள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களில் ரூ.1.27 கோடி மதிப்பிலான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. 

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.29 லட்சம் மதிப்பிலான வாகனங்கள், பொருட்கள் சேதம் அடைந்து உள்ளது. 
தூத்துக்குடியில் அம்மா உணவகம் 24 மணி நேரமும் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகள் திறந்துவைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. தூத்துக்குடியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்குவது பற்றி நாளை முடிவு செய்யப்படும். புறநகர்ப் பகுதிகளில் ஏற்கனவே பேருந்துகள் இயங்கத் தொடங்கிவிட்டன. நகரத்துக்கு உள்ளும் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது மதுரையில் இருந்து காய்கறிகள் வரவழைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும். தூத்துக்குடியில் அமைதி திரும்ப பல்வேறு தரப்பினரை சந்தித்து ஆலோசித்து வருகிறோம். தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 
 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை, அரசின் எண்ணமும் அதுவாகதான் உள்ளது எனவும் குறிப்பிட்டார். ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர் மற்றும் மின்சார சேவையானது நிறுத்தப்பட்டது எனவும் கூறிஉள்ளார். 

Next Story