‘என் மீது வழக்கு மட்டும் அல்ல; துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக்கொள்வேன்’ மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


‘என் மீது வழக்கு மட்டும் அல்ல; துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக்கொள்வேன்’ மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 May 2018 12:00 AM GMT (Updated: 24 May 2018 7:13 PM GMT)

தூத்துக்குடி சென்றதற்காக என் மீது வழக்கு போடுவது மட்டுமல்ல, என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக்கொள்வேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். #SterliteProtest #Thoothukudi #MKStalin

தூத்துக்குடி சென்றதற்காக என் மீது வழக்கு போடுவது மட்டுமல்ல, என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக்கொள்வேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- தூத்துக்குடிக்கு நீங்கள் சென்றதால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறதே?

பதில்:- தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்ன என் மீது என்ன வழக்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளட்டும். அதுபற்றி கவலையில்லை. அங்கு குண்டடிபட்டு பலர் இறந்திருக்கிறார்கள். எனவே, அதே போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்வது மட்டுமில்லை, என்னை நோக்கி சுட்டாலும், அதையெல்லாம் தாங்கிக்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

கேள்வி:- தமிழகமே கொந்தளித்துள்ள நிலையில், நீங்கள் போராட்டங்கள் நடத்தியும் அரசு மவுனம் காக்கிறதே?

பதில்:- இவர்களுக்கு காவிரி, நீட் பிரச்சினை உட்பட எதுபற்றியும் கவலையில்லை. தூத்துக்குடியில் ஏறக்குறைய 100 நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அழைத்து பேசுவதற்கு முதல்-அமைச்சர் முயற்சி செய்யவில்லை.

12 பேரை சுட்டுக் கொன்றிருக்கும் கொடுமையைவிட, முதல்-அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எங்களை கைது செய்திருப்பது ஒன்றும் பெரிதல்ல. எங்களையும் சுட்டுத்தள்ளினாலும் அதை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது வீசப்பட்ட குண்டுகளை எங்கள் மீது வீசினாலும், அவற்றை நெஞ்சை நிமிர்த்தி மனப்பூர்வமாக தாங்கிக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story