முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் மரணம்


முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் மரணம்
x
தினத்தந்தி 28 Aug 2018 3:30 AM IST (Updated: 28 Aug 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் மரணம் அடைந்தார்.

மதுரை, 

கடந்த 1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவர் நாகூர் மீரான் (வயது 54). நெல்லை மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவர் சிறுநீரக கோளாறு காரணமாக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணம் அடைந்தார்.

வாழ்க்கை குறிப்பு

நாகூர் மீரான் தென்காசி அருகே உள்ள வடகரை பகுதியைச் சேர்ந்தவர். இவரது மனைவி நூர் ஜமீலா. இவர் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு செய்யது உல் முபாரக், செய்யது சுலைமான் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். செய்யது உல் முபாரக் கனடா நாட்டில் உள்ளார்.

கடந்த 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1992-ம் ஆண்டு கதர் வாரிய தலைவராக பொறுப்பேற்றார். பின்னர் சிறுபான்மையினர் நலத்துறை, சுற்றுலாத்துறை அமைச்சராகவும் இருந்தார். தற்போது அவர் அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளராக இருந்தார்.

இன்று உடல் அடக்கம்

அவரது உடல் சொந்த ஊரான வடகரைக்கு நேற்று இரவில் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணிக்கு வடகரை பள்ளிவாசலில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
1 More update

Next Story