ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கோரி இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்


ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கோரி இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 2 Sep 2018 7:43 PM GMT (Updated: 2 Sep 2018 7:43 PM GMT)

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து குறித்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை அமல்படுத்த கோரி இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

சென்னை,

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து குறித்து கடந்த பிப்ரவரி 12-ந்தேதி ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த கோரி இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், சொற்பொழிவாளர் மணியன்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ஜ.க. தேசிய செயலாளரும், இந்து ஆலயங்கள் மீட்பு இயக்க நிறுவனருமான எச்.ராஜா போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், 38 ஆயிரத்து 468 கோவில்கள், திருமடங்கள் மற்றும் திருமட கோவில்கள் உள்ளன. அதில் தற்போது 9 ஆயிரம் கோவில்களில் வழிபாடு நடக்கவில்லை. 2 ஆயிரம் கோவில்கள் இருந்த இடத்தில் கடைகளும், ஓட்டல்களுமாக உள்ளன.

கோவில்களில் சொத்து பதிவேடு முறையாக பராமரிக்காததால் சொத்து விவரங்கள் முழுமையாக அதிகாரிகளுக்கு தெரியவில்லை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் சொத்து குறித்து ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அறநிலையத் துறை அலுவலகங்கள் முன்பு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பா.ஜ.க. மாநில செயலாளர் கே.பி.ராகவன், டைரக்டர் விசு, மீனவர் அமைப்பை சேர்ந்த அன்பழகனார், இந்து ஆலயங்கள் மீட்பு இயக்க கமிட்டி உறுப்பினர்கள் உமா ஆனந்த், டி.ஆர்.ரமேஷ், ஆடிட்டர் நாகராஜன், விஸ்வநாதன் மற்றும் அர்ஜூன் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

தொடர்ந்து எச்.ராஜாவிற்கு இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

Next Story