ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி ஜி.கே.வாசன் பேச்சு


ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி ஜி.கே.வாசன் பேச்சு
x
தினத்தந்தி 3 Dec 2018 8:45 PM GMT (Updated: 3 Dec 2018 8:08 PM GMT)

ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் தேர்தலில் கூட்டணி அமைப்போம் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

அரியலூர், 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அரியலூரில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் கோவை தங்கம், விடியல் சேகர், இளைஞர் அணி தலைவர் யுவராஜா உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். இதையடுத்து ஜி.கே.வாசன் பேசியதாவது:-

த.மா.கா. தேர்தலுக்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல. லட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. தேர்தலில் வெற்றி, தோல்வி ஏற்பட்டாலும் உயிரோட்டமாக செயல்பட்டு வருகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர் இன்னும் துடைக்கப்படவில்லை. மத்திய அரசு உடனடியாக நிவாரண தொகையை வழங்க வேண்டும்.

கூட்டணி

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணியை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு த.மா.கா. சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணமும், ரூ.40 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு உள்ளன. தற்போது ஆள்பலம், பணபலம், அதிகாரபலம் உள்ளவர்கள் மட்டுமே கட்சி நடத்த முடியும். ஆனால் த.மா.கா. தொண்டர்கள், மக்கள் பலத்தால் செயல்பட்டு வருகிறது.

தேர்தலின் போது ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். மக்கள் மத்திய, மாநில அரசு மீது வெறுப்பில் உள்ளனர். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கண்டித்து வருகிற 8-ந் தேதி கிருஷ்ணகிரியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நினைவு பரிசு

தொடர்ந்து ஜி.கே.மூப்பனார் பற்றிய செய்திகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். பின்னர் ஜி.கே.வாசனுக்கு அரியலூர் மாவட்ட த.மா.கா. சார்பில் வீரவாள் மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

Next Story