யாருடைய மனதையும் புண்படுத்தாமல் நடந்த இந்து ஆன்மிக கண்காட்சி எஸ்.குருமூர்த்தி பெருமிதம்


யாருடைய மனதையும் புண்படுத்தாமல் நடந்த இந்து ஆன்மிக கண்காட்சி எஸ்.குருமூர்த்தி பெருமிதம்
x
தினத்தந்தி 4 Feb 2019 10:00 PM GMT (Updated: 4 Feb 2019 8:40 PM GMT)

யாருடைய மனதையும் புண்படுத்தாமல் எல்லா நல்லதையும், நாட்டுக்கு உகந்ததையும் இந்து ஆன்மிக சேவை கண்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.

சென்னை,

சென்னையில் நடந்த 10-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் நிறைவு விழாவில் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்து ஆன்மிகம் அரசுக்கு அப்பாற்பட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனுசரித்து இருக்கிறது. 1994-ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்துத்துவா வழக்கின் தீர்ப்பின்படி இந்து, இந்துயிசம், இந்துத்துவம் இவற்றை, இந்துத்துவத்திற்கு மதச்சார்பாக கூறக்கூடாது. இவை மூன்றும் இந்த நாட்டினுடைய பழமையை, வாழ்க்கை முறையை, கலாசாரத்தைக் குறிக்கும். இவை பரந்த நோக்கோடு பார்க்க வேண்டிய வார்த்தைகள். இதைத்தான், இந்து ஆன்மிக சேவை அறக்கட்டளையும் பின்பற்றுகிறது. இதுதான் இந்துத்துவாவிற்கு நாங்கள் கூறும் அர்த்தம். இது எல்லோராலும் ஏற்கக்கூடியது.

சுப்ரீம் கோர்ட்டு சொன்னால் வேறு யாரும் ஒன்றும் சொல்ல முடியாது. எனவே, இந்து என்பதற்கு அர்த்தத்தை சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இதனால் இந்து ஆன்மிக கண்காட்சியிலும், இணைவதற்கு யாரும் தயங்குவதில்லை.

இதில் பல ஆன்மிக இயக்கங்கள், சமுதாய அமைப்புகள், பள்ளிக் கல்லூரிகள், நிறுவனங்கள் இணைகின்றன. இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் நாம் எல்லோரையும் ஆன்மிக கலாசார ரீதியில் இணைக்கும் ஒரு நிகழ்வாக இருப்பதால்தான் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களும் இணைகின்றனர்.

அதனால் இந்து என்ற வார்த்தையை அரசியலில் அவப்பெயராக செய்தது தவறு என்பதை நாம் முதலில் நிரூபிக்கிறோம். அரசியலில் இதை வகுப்பு வாதமாகவும், ஒரு தவறாகவும் குறுகிய எண்ணமாகவும் செய்திருப்பது தவறு. ஆனாலும், நாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருப்பதால் நமக்கு அது பிரச்சினை கிடையாது.

வனவிலங்குகளை வளர்ப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, ஜீவராசிகளைப் பேணுதல், தாய், தந்தை, ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துதல். பெண்களை போற்றுதல், நாட்டையும் நாட்டுக்காக தியாகம் செய்தவர்களையும் துதிப்பது. இந்த ஆறு பண்புகளில், ஆறாவது அம்சமான நாட்டுப்பற்றை மையமாக வைத்து இந்த கண்காட்சி நடத்தப்பட்டது.

300 ஆண்டுகளாக நடந்த போராட்டத்தின் சிறிய துளியைத்தான் இந்த கண்காட்சியில் காண்பித்துள்ளோம். அதை காண்பித்ததிலேயே, ஒரு பெரிய தாக்கம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட நிகழ்வுகளை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்ததை பார்த்த பலர் அழுது கண்ணீர் வடித்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது அவர்களுடைய மனதை தொட்டுள்ளது. இது உணர்வுபூர்வமாக தேசபக்தியை உருவாக்குவது.

கடந்த 15 நாட்களுக்கு முன்னால், இன்னொரு கல்லூரியில் ஒரு கண்காட்சி நடந்தது. அது எவ்வளவு கேவலமாக நடந்தது, மற்றவர்கள் மனதை புண்படுத்துவது, மற்றவர்களுடைய நம்பிக்கையை கேவலப்படுத்தும் வகையில் அந்த கண்காட்சி நடந்தது. ஆனால், இங்குள்ள கண்காட்சி யாரையும் புண்படுத்தவில்லை, எல்லா நல்லதையும் எடுத்துக்காட்டியுள்ளது.

நாட்டுக்கு உகந்ததைக் கூறுகிறோம். அதனால் இந்த இரண்டு கண்காட்சியில் அந்த கண்காட்சி வெறுப்பை தூண்டியது. இரண்டு சிந்தனை, அப்படி ஒரு சிந்தனை இருக்கிறது, இப்படி ஒரு சிந்தனை இருக்கிறது என்று ஒப்பிடவில்லை. இரண்டு விதமான சிந்தனைகள் சிந்தனை நீரோட்டம் இருக்கிறது. இந்த நீரோட்டம் இருக்கிறதே இதுதான் நாட்டுக்கு உகந்த நீரோட்டம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை சார்பில் சென்னை, வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 10-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி கடந்த மாதம் 30-ந் தேதி தொடங்கி நேற்று வரை 6 நாட்கள் நடந்தது. கண்காட்சியின் இறுதி நாளான நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் கண்காட்சியைப் பார்வையிட்டார்.

கண்காட்சியையொட்டி சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 350 பள்ளிகளைச் சேர்ந்த 45 ஆயிரம் மாணவர்களுக்கு பாரம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற 12 ஆயிரம் மாணவர்கள் கண்காட்சி வளாகத்தில் நடந்த இறுதி சுற்றில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு ரூ.30 லட்சம் அளவில் ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

கண்காட்சி நிறைவு விழாவையொட்டி நேற்று மாலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது.

இதுகுறித்து, இந்து ஆன்மிக மற்றும் சேவை மையத்தின் துணைத்தலைவர் ஆர்.ராஜலட்சுமி கூறியதாவது:-

குருநானக் கல்லூரியில் கடந்த 6 நாட்களாக 10-வது இந்து ஆன்மிக சேவை கண்காட்சி வெகு சிறப்பாக நடந்து முடிந்தது.

கண்காட்சி தொடங்கிய நாளிலிருந்து பார்வையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனது. முதல் நாள் 75 ஆயிரத்தில் தொடங்கி விடுமுறை நாட்களில் 5 லட்சம் வரை பார்வையாளர்கள் பார்வையிட்டனர். மொத்தம் 6 நாட்களில் 15 லட்சம் பேர் பார்வையிட்டது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story