தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு


தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு
x
தினத்தந்தி 4 March 2019 12:29 PM GMT (Updated: 4 March 2019 1:28 PM GMT)

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தலை அதீத பலத்துடன் எதிர்கொள்ள தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தே.மு.தி.க. இரண்டு பக்கமும் போக்குகாட்டுவதால், கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலையில் இரு கட்சிகளும் இருந்து வருகின்றன.

மார்ச் 1-ந் தேதியை தி.மு.க.வும், மார்ச் 5-ந் தேதியை அ.தி.மு.க.வும் சுட்டிக்காட்டி, அதற்குள் கூட்டணி முடிவை அறிவிக்குமாறு தே.மு.தி.க.வுக்கு கெடு விதித்தது.

தி.மு.க.வின் கெடு முடிவடைந்த நிலையில், தே.மு.தி.க. நல்ல முடிவை எடுத்து அறிவிக்கும் என்று அக்கட்சியினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

கடந்த 2 நாட்களாக  தே.மு.தி.க.  அலுவலகத்தில்  கூட்டணி குறித்து பேச அமைக்கப்பட்ட குழுவுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். 

இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு குழு நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன், அன்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாளை தே.மு.தி.க.வின் உயல்நிலைக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்  விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் விசாரிக்க போவதாக தகவல் வெளியானது.

அதன்படி ஒருங்கினைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர்களை தே.மு.தி.க.  எல்.கே சுதீஷ் வரவேற்று அழைத்துச் சென்றார். விஜயகாந்த்திற்கு பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்தனர்.  அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

Next Story