லோக் ஆயுக்தாவிற்கு நான் வழங்கிய ஆலோசனைகளை அரசு ஏற்கவில்லை பணியாளர்-நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்


லோக் ஆயுக்தாவிற்கு நான் வழங்கிய ஆலோசனைகளை அரசு ஏற்கவில்லை பணியாளர்-நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 13 March 2019 10:27 PM GMT (Updated: 13 March 2019 10:27 PM GMT)

அமைய உள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்தாவிற்கு தான் வழங்கிய ஆலோசனைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று, அரசு செயலாளருக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அரசு செயலாளர் சி.சுவர்ணாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

லோக் ஆயுக்தா

தமிழ்நாடு லோக் ஆயுக்தாவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் கூட்டம் 13-ந்தேதி (நேற்று) அன்று நடைபெறவிருப்பதாகவும், அதில் தேர்வுக்குழுவின் உறுப்பினர் என்ற முறையில் நான் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊழல் வழக்குகளில் ஆழமாகச் சிக்கியுள்ள முதல்-அமைச்சரின் தலைமையிலான இந்த அரசு அமைக்க விரும்பும் லோக் ஆயுக்தா, தேவையான அதிகாரமற்ற பல் இல்லாத அமைப்பாக இருப்பது பற்றி, கடந்த 27.12.2018 அன்று தங்களுக்கு எழுதிய கடிதத்தில் நான் விரிவாகச்சுட்டிக்காட்டியிருந்தேன். அந்த காரணங்கள் எவ்வித மாற்றமும் இன்றி இன்னும் அப்படியே நீடிக்கின்றன.

பங்கேற்க இயலாது

லோக் ஆயுக்தா அமைப்பை உண்மையிலேயே ஊழலை ஒழிக்கும் ஓர் அமைப்பாக மாற்றி அமைத்திட தேர்வுக்குழு உறுப்பினர் என்ற முறையில், நான் வழங்கிய ஆலோசனைகளை இந்த அரசு பரிசீலனை செய்யவோ, ஏற்றுக் கொள்ளவோ இதுவரை முன்வரவில்லை. ஆகவே வெளிப்படையான நேர்மையான ஊழல் விசாரணைக்கு எந்த வகையிலும் உதவாத, அதிகாரமற்ற ஒரு லோக் ஆயுக்தா அமைப்பிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் கூட்டத்தில் நான் பங்கேற்க இயலாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story