தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு -ஜெ.தீபா பேட்டி


தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு  -ஜெ.தீபா பேட்டி
x
தினத்தந்தி 22 March 2019 11:17 AM GMT (Updated: 22 March 2019 11:24 AM GMT)

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக ஜெ.தீபா பேட்டியளித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்றத் இடைத்தேர்தலிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக ஜெ. தீபா அறிவித்து இருந்தார். இந்நிலையில் விரைவில் அவருடைய வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்தது. ஆனால் போட்டியில்லை, அதிமுகவிற்கு ஆதரவு அளிக்கிறோம் என பல்டி அடித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் ஜெ.தீபா பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்றத் இடைத்தேர்தலிலும் நாங்கள் அதிமுகவிற்கு ஆதரவு கொடுக்கிறோம். மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள், நிர்வாகிகள் பாடுபடுவர். நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர்தான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் எதிர்கால நலன், வெற்றியை கருத்தில் கொண்டு ஆதரவு அளிக்கப்படுகிறது என கூறியுள்ளார்.
 
அதிமுகவுடன் என்னுடைய இயக்கத்தை இணைப்பேன் என கூறியுள்ள ஜெ.தீபா, அதிமுகவோடு இணையும் பேச்சுவார்த்தை தேர்தலுக்கு பிறகு தொடரும். அதிமுக தலைமையிலிருந்து அழைப்பு வந்தால் பிரசாரம் மேற்கொள்வேன். அதிமுகவில் எந்தஒரு பொறுப்பையும் நான் எதிர்பார்க்கவில்லை. அதிமுகவின் எதிர்கால நலன் மட்டுமே முக்கியமானது. கட்சி அழிவுப்பாதைக்கு சென்றுவிடக்கூடாது. அதற்காக பணியாற்றுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story