மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிப்பு


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 22 March 2019 1:53 PM GMT (Updated: 22 March 2019 1:53 PM GMT)

கோவையில் நாளை மறுநாள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த ஆண்டு உதயமானது. அந்த கட்சி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தனித்து களம் காண்கிறது. 

மக்கள் நீதி மய்யம் சார்பில், இந்த தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு பெறப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 132 பேரும், இடைத்தேர்தலில் போட்டியிட 150 பேரும் விருப்பமனு அளித்தனர். அவர்களிடம் கமல்ஹாசன் முன்னிலையில் வேட்பாளர் நேர்காணல் நடந்து முடிந்தது.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய இந்திய குடியரசு கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சியோடு இணைந்து நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன்  சந்தித்து பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு இந்திய குடியரசு கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதியும், 3 சட்டமன்ற தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை 20-ந் தேதி புதன்கிழமை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

இந்நிலையில், கோவையில் நாளை மறுநாள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களையும் கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைக்கிறார். 

Next Story