ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது வரம்புக்குட்பட்டே விசாரிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்


ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது வரம்புக்குட்பட்டே விசாரிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்
x
தினத்தந்தி 4 April 2019 5:29 AM GMT (Updated: 4 April 2019 5:29 AM GMT)

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது வரம்புக்குட்பட்டே விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதனால் ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரிக்கும் என்று 2017 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவரின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உறவினர்கள், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவகுமார், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மற்ற மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அப்போலோ செவிலியர்கள், அப்போலோ மருத்துவர்கள், அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலர், தமிழக முன்னாள் தலைமை செயலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தங்கள் மருத்துவர்களை விசாரிக்க வேண்டுமென்றால் 21 மருத்துவர்கள் கொண்டு குழுவை அமைக்க உத்தரவிடவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடையில்லை எனவும் 21 துறைகளை சேர்ந்த மருத்துவக்குழு அமைக்க வேண்டும் என்ற அப்பல்லோ கோரிக்கையையும் நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தனது வரம்புக்குட்பட்டே விசாரிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Next Story