அரசு தேர்வுத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு: பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியீடு


அரசு தேர்வுத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு: பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியீடு
x
தினத்தந்தி 16 April 2019 11:45 PM GMT (Updated: 16 April 2019 11:05 PM GMT)

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மதிப்பெண்கள் மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக வரும்.

சென்னை,

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வருகிற 19-ந்தேதி (நாளை மறுதினம்) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

தேர்வர்கள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக(எஸ்.எம்.எஸ்.) மதிப்பெண் அனுப்பப்படும். வருகிற 20-ந்தேதி காலை 9 மணி முதல் 26-ந்தேதி வரை தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், வருகிற 24-ந்தேதி காலை 9 மணி முதல் 26-ந்தேதி வரை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வருகிற 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூன்-2019 சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேதிகள் குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும். பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 6-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 14-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.

மேற்கண்ட தகவல் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story