ஆண்டிப்பட்டியில் அமமுகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு


ஆண்டிப்பட்டியில் அமமுகவினர் 150 பேர் மீது  வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 April 2019 2:44 AM GMT (Updated: 17 April 2019 2:44 AM GMT)

ஆண்டிப்பட்டியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அமமுகவினர் 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள  அ.ம.மு.க. அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு 8.30 மணியளவில் சோதனை நடத்தினர். விடிய விடிய இந்த சோதனை நடைபெற்றது.   அப்போது திடீரென 50-க்கும் மேற்பட்ட அ.ம.மு.க.வினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் சோதனையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில், அவர்களை சோதனை செய்ய விடாமல் தடுத்தனர். மேலும் அந்த கட்சியினர், அந்த அறைக்குள் புகுந்து பணத்தை அள்ளி செல்ல முயன்றதாக தெரிகிறது.

இதனையடுத்து அவர்களை விரட்டுவதற்கான முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போலீசாரிடம் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனால் நிலைமை விபரீதமானது. அவர்களை விரட்டுவதற்காக, துணை ராணுவப்படையினர் வானத்தை நோக்கி 4 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். அந்த சத்தம் கேட்டு அ.ம.மு.க.வினர் அங்கிருந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் நேற்று தேனியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

விடிய விடிய நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை அதிகாலை 5.30 மணியளவில் முடிவுக்கு வந்தது. சோதனையில், ரூ. 1.50 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.  பணம் வைத்திருந்ததாக அமமுக மாவட்ட துணைச்செயலாளர் பழனி, கமன்ராஜ், பிரகாஷ், மது ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சூழலில், ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த சுமார் 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை முயற்சி, பணத்தை திருடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஆண்டிப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


Next Story