அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் எடப்பாடி பழனிசாமி பேட்டி


அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 21 May 2019 12:11 AM GMT (Updated: 21 May 2019 12:11 AM GMT)

39 நாடாளுமன்ற தொகுதிகள், 22 சட்டமன்ற தொகுதிகள் என அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- தேர்தல் கருத்து கணிப்புகளில் அ.தி.மு.க.வுக்கு குறைந்த இடங்கள் தான் கிடைக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறதே?

பதில்:- சென்ற தேர்தலின்போது, சேலம் மாவட்டத்தில் நான் தோல்வி அடைவேன் என்று தான் சொன்னார்கள். ஆனால், நான் 42 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். சேலத்தில் 10 இடங்களில் நாங்கள் வெற்றி பெற்றோம். இதுதான் கருத்து கணிப்பின் நிலவரம், இது கருத்து கணிப்பு இல்லை, கருத்து திணிப்பு. 23-ந்தேதி கருத்து கணிப்பு சரியா, அல்லது நாங்கள் சொல்வது சரியா என்று ஊடகத்தில் இருக்கும் நீங்களே சொல்லுங்கள்.

கேள்வி:- பா.ஜ.க.விற்கு இந்த கருத்து கணிப்பு பொருந்துமா?

பதில்:- தமிழகத்தை பொறுத்து தான் நான் பேசுகிறேன். மற்ற மாநிலங்களை பற்றி எனக்கு தெரியாது. தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். தமிழகம், புதுச்சேரியில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் வெற்றி பெறும். அதேபோல, சட்டமன்ற இடைத்தேர்தலிலும் 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

கேள்வி:- ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன?

பதில்:- நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். விவசாயிகள் பாதிக்கக்கூடிய எந்தத் திட்டத்தையும் அ.தி.மு.க. அரசு அனுமதிக்காது. நாங்கள் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம், அவர்கள் ஏதாவது ஒரு போராட்டத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

கேள்வி:- விவசாயிகள் பாதிக்கக்கூடிய திட்டம் என்பது 8 வழிச்சாலைக்கும் பொருந்துமா?

பதில்:- அது எப்படி பாதிக்கும் என்கிறீர்கள்? சாலையில்லாமல் எந்த இடத்திற்கு போகமுடியும்? தி.மு.க. ஆட்சியிலும் தான் சாலைகள் போட்டார்கள், அப்பொழுது விவசாயிகள் பாதிக்கப்படவில்லையா? அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் சாலைகள் அமைக்க வேண்டும், அப்பொழுது தான் விபத்துகளை குறைக்க முடியும், குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும். அதுமட்டுமல்ல, தொழில் வளம் பெருக வேண்டுமென்றால், சாலை வசதி முக்கியம். தற்போது இருக்கின்ற நிலைமைக்கேற்ப சாலைகள் அமைத்தால் தான் விபத்தில்லாமல் பயணம் செய்யமுடியும், எரிபொருளை சிக்கனப்படுத்த முடியும். அரசு இதையெல்லாம் அறிந்துதான் மக்களுடைய நன்மையை கருதித்தான் செய்கிறது.

கேள்வி:- விவசாயம் அழிவதால் உணவு பஞ்சம் ஏற்படுமே?

பதில்:- எங்கு விவசாயம் அழிகிறது? எவ்வளவு நிலம் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? எவ்வளவு வறட்சியான பகுதி, எவ்வளவு பாசன வசதி என்பதையெல்லாம் கணக்கிட்டுத்தான் கொடுக்கிறார்கள். பாசன பகுதிகளில் உள்ளவர்கள் தான் முன்வந்து மிக ஆர்வமாக கொடுக்கிறார்கள், வறட்சியான பகுதியில் இருப்பவர்கள் தான் போராட்டம் செய்கிறார்கள். 100 சதவீதத்தில் 7 சதவீதம் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆகவே, இந்த நாட்டினுடைய நலம் கருதி அனைவரும் மனமுவந்து வழங்கினால் நன்றாக இருக்கும்.

கேள்வி:- மூங்கில் மரங்களை 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வெட்டிவிட்டார்கள், பசுமையை அழிக்கிறார்கள், சுற்றுச்சூழலை அழிக்கிறார்கள் என சொல்லப்பட்டு வருகிறதே?.

பதில்:- இது எல்லாமே நாம் நட்டது தான், எல்லாமே உருவாக்க முடியும். மனிதர்கள் நினைத்தால் எதையும் உருவாக்க முடியும். ஆனால் உயிர் போனால் வராது. ஆகவே, விபத்தை தவிர்க்க வேண்டும், அதே நேரத்தில் இன்றைக்கு இருக்கும் சூழ்நிலைக்கேற்றவாறு சாலைகளை உருவாக்க வேண்டும் என்பது தான் அரசினுடைய நிலைப்பாடு. மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் அரசு நடைமுறைப்படுத்துமேயொழிய அரசு மக்களிடம் எதையோ திணிப்பதுபோல் ஒரு செய்தியை பரப்புவது சரியல்ல.

கேள்வி:- மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார், மத்திய மந்திரி இலாகாக்களை கேட்டிருக்கிறார்கள் என்று ஒரு தகவல் வருகிறதே?

பதில்:- நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். அவருடைய குணத்தை நீங்களே புரிந்து கொண்டீர்கள். தி.மு.க.வின் நிலைப்பாட்டை நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். அடிக்கடி நிறம் மாறக்கூடியவர்கள், ஒரு நிலையான எண்ணம் கொண்டவர்கள் அல்ல. அந்தக் கட்சியைப் பொறுத்தவரைக்கும், காலத்திற்கேற்றவாறு தங்களை மாற்றிக்கொள்வார்கள்.

கேள்வி:- பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்தால் அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறுமா?

பதில்:- தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியில் வந்த பின்பு சிந்திக்கலாம்.

கேள்வி:- குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறதே?

பதில்:- நான் ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கின்றேன். பருவமழை பொய்த்த காரணத்தினாலே பல்வேறு பகுதிகளில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது. வறட்சி வந்தால் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேர்தலுக்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்த அதிகாரிகளை அழைத்து தலைமை செயலகத்திலே நல்ல ஆலோசனை வழங்கியிருக்கிறோம். எங்கெங்கெல்லாம் குடிநீர் பிரச்சினை இருக்கின்றதோ அங்கெல்லாம் மக்களுக்கு தேவையான குடிநீர் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கேள்வி:- 7 பேர் விடுதலை குறித்து கவர்னரே முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருக்கிறது, தமிழக அரசு அதனை வலியுறுத்துமா?

பதில்:- 7 பேர் விடுதலை ஆகவேண்டும் என்றுதான் அமைச்சரவை கூடி முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. எங்களைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் சரியாக செயல்பட்டு இருக்கிறோம். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது நளினியை மட்டும் விடுதலை செய்யலாம், மற்றவர்கள் தேவையில்லை என்று ஏற்கனவே அவர்கள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டு அந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றார்கள். கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி:- சென்னைக்கு குடிநீர் ரெயில் மூலம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- தற்போது அந்த நிலை இல்லை. சுற்றுவட்டாரத்தில் இருக்கின்ற கிணறுகள் வாயிலாகவும், குவாரிகளில் உள்ள தண்ணீரை எடுத்து, சுத்தப்படுத்தி போதுமான அளவிற்கு சென்னை மாநகர மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் கூடுதலாக தண்ணீர் தேவைப்பட்டால், குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன வழியை செய்யமுடியுமோ அத்தனையையும் செய்வோம். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story