8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் சேலம் அருகே பரபரப்பு


8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் சேலம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 21 May 2019 9:45 PM GMT (Updated: 21 May 2019 8:59 PM GMT)

சேலம் அருகே 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக இந்த சாலை அமைகிறது. இதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. இதையொட்டி கல் நடும் பணியும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து 8 வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. 8 வழிச்சாலையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சேலம் விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, 8 வழிச்சாலைக்கு 7 சதவீதம் பேர் தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், என்றார்.

இதை கண்டித்தும், 8 வழிச்சாலைக்கு எதிராகவும் நேற்று காலை சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே ராமலிங்கபுரத்தில் உள்ள விவசாய நிலத்தில் விவசாயிகள் மற்றும் பெண்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது கோர்ட்டு அவமதிப்பு ஆகும். எனவே முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும், இந்த 8 வழிச்சாலையை ஏற்கனவே உள்ள சேலம்-ஊத்தங்கரை சாலையில் அமைக்க வேண்டும் என்றனர்.

இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மக்கள் உணவாக உட்கொள்கிறார்கள். விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் 8 வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என்று அரசு கூறி வருகிறது. நீதிமன்ற தீர்ப்பை அரசு செயல்படுத்த வேண்டும். நிலத்தை கையகப்படுத்துவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் பறிக்கப்படுகிறது. வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று அரசு கூறுகிறது. ஆனால் 8 வழிச்சாலையால் ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படுகின்றன. எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும், என்றனர்.

விவசாயிகளின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story