டி.வி. பார்ப்பதில் அக்காள்-தம்பியுடன் தகராறு: கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


டி.வி. பார்ப்பதில் அக்காள்-தம்பியுடன் தகராறு: கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 May 2019 10:30 PM GMT (Updated: 25 May 2019 7:37 PM GMT)

வீட்டில் டி.வி. பார்ப்பதில் அக்காள், தம்பியுடன் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அடையாறு, 

வீட்டில் டி.வி. பார்ப்பதில் அக்காள், தம்பியுடன் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவர்

சென்னை கோட்டூர்புரம், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் வில்லியம். இவருடைய மகன் பெய்லி சில்வன்(வயது 19). இவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று வீட்டில் இருந்த பெய்லி சில்வன், தனது அக்காள் மற்றும் தம்பியுடன் சேர்ந்து டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது டி.வி.யில் பிடித்தமான சேனல் வைப்பதில் பெய்லி சில்வனுக்கும், அவருடைய அக்காள், தம்பி ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

3 பேருக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த பெய்லி சில்வன், டி.வி. ரிமோட்டை கீழேபோட்டு உடைத்து விட்டு கோபமாக வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டதாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

அவர் தனது நண்பர்களை பார்க்க சென்று இருக்கலாம் என அவரது பெற்றோர் கருதி விட்டனர். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர், சந்தேகத்தின்பேரில் வீட்டின் 3-வது மாடியில் உள்ள பெய்லி சில்வனின் அறைக்கு சென்று பார்த்தனர்.

கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தட்டிப்பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பெய்லி சில்வன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story