சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்பு


சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவி ஏற்பு
x
தினத்தந்தி 27 May 2019 9:44 PM GMT (Updated: 27 May 2019 9:44 PM GMT)

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

சென்னை,

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆட்சி கவிழுமா? என்ற குழப்பமான நிலையில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான 9 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.

அதாவது, சம்பத்குமார் (அரூர்), கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), எஸ்.தேன்மொழி (நிலக்கோட்டை), எஸ்.நாகராஜன் (மானாமதுரை), எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் (சாத்தூர்), என்.சதன்பிரபாகர் (பரமக்குடி), சம்பத் (சோளிங்கர்), பி.கந்தசாமி (சூலூர்), சின்னப்பன் (விளாத்திகுளம்) ஆகிய 9 அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தி.மு.க. 13 இடங்களை கைப்பற்றியும் அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேரும் நாளை (புதன்கிழமை) சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் பதவியேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

தற்போதைய நிலையில் தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 123 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்களின் பலமும் 110 ஆக அதிகரித்துள்ளது.

Next Story